கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ரயிலில் ஏற சென்ற அமைச்சர் ஜாஹீர் கொசைன் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அம்மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சரான அவர் கொல்கத்தா செல்வதற்காக நேற்று இரவு முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நிமிதா என்ற ரயில் நிலையத்தில் தனது ஆதரவாளர்களோடு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அமைச்சரை நோக்கி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் குழப்பம் ஏற்பட அமைச்சரோடு வந்தவர்கள் அபயக்குரல் எழுப்பினர். வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்த அமைச்சர் ஜாஹீர் கொசைன் ஜாங்கிப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரோடு வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ உட்பட இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து நிமிதா ரயில் நிலையத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். தாக்குதல் குறித்து மேற்குவங்க காவல்துறையினர் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.
வெடிகுண்டு வீச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசியல் எதிரிகள் தான் காரணம் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான மலேகட்டக் குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காயமடைந்தவர்கள் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாக கூறியுள்ளார்.