புதுடெல்லி: கடந்த 2018ல் உலகம் முழுவதும் ‘மீ டூ’ என்ற ஹேஷ்டேக்கில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரங்களை பொதுவெளியில் வெளியிடும் விவகாரம் வைரலானது. இந்தியாவில் ‘மீ டூ’ இயக்கத்தில் பல பிரபலங்கள் முன்வந்து அவர்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக தெரிவித்தனர். பிரபல பத்திரிகையாளரான பிரியா ரமணி, அப்போதைய வெளியுறவுத இணை அமைச்சர் எம்.ஜே. அக்பரின் கீழ் பணியாற்றிய போது அவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்தார். இதனால், எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக அக்பர் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அதோடு, தன் மீது பொய் புகார் கூறியதற்காக பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் 3 ஆண்டாக விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கில் நீதிபதி ரவீந்திர குமார் பாண்டே நேற்று தீர்ப்பளித்தார்.
அவர் தனது தீர்ப்பில், ‘பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஒரு பெண் குரல் கொடுத்து விட்டார் என்பதற்காக அவரை தண்டித்து விட முடியாது., பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமையை எந்த தளத்திலும், எவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் வெளிப்படுத்தும் உரிமை அவர்களுக்கு உள்ளது. மகாபாரதம், ராமாயணம் போன்ற மகா காவியங்கள் மதிக்கப்படுவது குறித்து எழுதப்பட்ட ஒரு நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவது வெட்கக்கேடானது,’’ என கூறி, அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.