சென்னை: காஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு சமக தலைவர் சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சமையல் எரிவாயுவின் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதாவது இந்த மாதம் துவங்கி 15 நாட்களில் 2 முறை விலை உயர்த்தப்பட்டு ரூ.75 உயர்த்தி விற்பது மிகவும் வேதனையளிக்கிறது. 51.7% ஆண்களும், 25.6% பெண்களும் பணிக்கு செல்லும் இந்தியாவில் எவரது வருவாயும் தினசரி உயர்த்தப்படுவதில்லை. ஆனால், பெட்ரோலிய பொருட்களின் விலை தினசரி உயரும் என்று சொன்னால் நடுத்தர குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் இனி முன்னேறவே முடியாதா என்ற சந்தேகத்திற்கு தள்ளப்படுகின்றனர். எப்போது வேண்டுமானால் விலையேற்றம் செய்யலாம் என எண்ணினால் அது மத்திய அரசின் தவறான போக்கு. மக்கள் ஒன்று சேர்ந்து வலுவான குரல் எழுப்பும் போது எந்த அரசாயினும் செவிசாய்த்து தான் ஆக வேண்டும். அதை உணர்ந்து உடனடியாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைத்திட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.