சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள வாக்குச்சாவடிகளில் பதற்றமான மற்றும் மிக பதற்றமாக வாக்குச்சாவடிகளை கணக்கெடுக்கும் பணிகளில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக துணை கமிஷனர் தலைமையில் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. முதற்கட்டமாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி சென்னையில் 475 வாக்கு சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல், 157 வாக்கு சாவடிகள் மிக பதற்றமானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கான அறிக்கையை துணை கமிஷனர் தலைமையிலான போலீசார், கமிஷனரிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பதற்றமானதாக கூறப்படும் வாக்குசாவடிகளில் வாக்கு பதிவின் போது வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், சம்பந்தப்பட்ட வாக்கு சாவடிகள் அமைந்துள்ள பகுதியில் குற்றப்பின்னணியில் உள்ள ரவுடிகள் அனைவரையும் கைது செய்ய அந்தந்த துணை கமிஷனர்களுக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாக காவல் துறை உயர் அதிகாரிகள் ஒருவர் தெரிவித்துள்ளார்.