கொள்ளேகால்: கிராம பஞ்சாயத்துகளின் வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கீடு செய்த நிதியை கிராம வளர்ச்சி அதிகாரி வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி இருப்பதை கர்நாடக தமிழர் களம் அமைப்பினர் கண்டுப்பிடித்துள்ளனர். சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவில் உள்ள கிராம பஞ்சாயத்துகளின் மத்திய அரசின் 15வது நிதி ஆணைய திட்டத்தில் 2020-21ம் நிதியாண்டில் மார்ட்டஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு ரூ.49 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி, நிதியை எந்த தேவைக்கு ஒதுக்கப்பட்டதோ, அதற்கு பயன்படுத்தாமல் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளதை கர்நாடக தமிழர் களம் அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டுப்பிடித்தனர். இது தொடர்பாக தமிழர் களம் அமைப்பின் பொதுச்செயலாளர் அற்புதராஜ், கொள்ளேகால் தாலுகா பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி சீனிவாசிடம் புகார் கொடுத்தனர். அதை பரிசீலனை செய்த தாலுகா நிர்வாக அதிகாரி, இது தொடர்பாக விளக்கம் கேட்டு மாரட்டஹள்ளி கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி சிவண்ணாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் வளர்ச்சி நிதியை பயன்படுத்தி குடிநீர் வசதி ஏற்படுத்தி இருக்கலாம். அதை செய்யாமல் தவிர்த்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.