மைசூரு: மைசூரு-பந்திப்பூர் வனப்பகுதியில் யானைகள் பராமரிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. தொடர்ந்து ஒரே இடத்தில் 160 யானைகள் கொண்டு வந்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடக வளமைக்கு வனப்பகுதி பெருமையை சேர்த்து வருகிறது. வனப்பகுதியில் அண்மைக் காலமாக வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக வரும் தகவல்கள் மாநில அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் விவசாயிகளின் பயிர்களை யானைகள் புகுந்து அழிக்கிறது. மேலும் வயல்வெளிகளை சுற்றி அமைக்கப்பட்டுள்ள மின் வேலிகளை தாண்டும் யானைகள் அதில் சிக்கி பலியாகும் சம்பவங்களும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்துள்ளது.
யானைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருவதால் மாநில அரசு யானைகளை பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. யானைகள் பராமரிப்புக்காக வனத்துறை அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு மைசூரு-பந்திப்பூர் வனப்பகுதியில் யானைகள் பராமரிப்புக்கு என தனி மையம் அமைக்க முடிவு செய்தது.
இந்த மையத்திற்கு 160 யானைகளை கொண்டு வந்து சேர்க்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும் இதை சுற்றுலா பகுதியாக மாற்றவும் ஆலோசனை வழங்கியுள்ளது. பொதுமக்கள் மூலம் வருமானம் கிடைக்கவும் வழி வகுக்கும் என்ற நம்பிக்கையை குழு தெரிவித்துள்ளது. தாய்லாந்தில் இதேபோல யானைகள் பராமரிப்புக்கு சியாங் மய் என்ற வனப்பகுதியில் மையம் ஏற்படுத்தியுள்ளதை உதாரணமாக கொண்டு கர்நாடகாவில் யானைகளுக்கு பராமரிப்பு மையம் ஏற்படுத்தப்படுகிறது.