சென்னை: மதுரவாயலில் உறைகிணற்றில் சேர்ந்த கழிவுநீர் அகற்றும் பணியின்போது விஷவாயு தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை மதுரவாயல் அருகே அஷ்டலட்சுமி நகர் என்ற பகுதியில் வசிப்பவர் நித்யா. இவர் வீட்டில் சுமார் 30 அடி ஆழத்தில் உறைகிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை ரவி, காசி என்ற இருவர் கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அச்சமயம் ரவி என்பவர் கிணற்றில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்குதலுக்கு உள்ளானார். இதன் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த ரவி மருத்துவமனை அழைத்து செல்லும் முன்பே பரிதாபமாக உயிரிழந்தார்.
காசி என்பவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். உறைகிணற்றில் சேர்ந்த கழிவுநீர் அகற்றும் பணியின்போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உறைகிணற்றுக்குள் எப்படி விஷவாயு வந்ததது என்பது மர்மமாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் உள்ள செப்டிக் டேங்க்கினை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டப்போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிழந்தது குறிப்பிடத்தக்கது.