×

கிரண்பேடி நீக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நாளை காலை 9 மணிக்கு பொறுப்பேற்கிறார்!!

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நாளை பொறுப்பேற்கிறார். கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி சர்ச்சைகளின் நாயகியாக வலம் வந்தார். கவர்னர் கிரண்பேடியின் தன்னிச்சையான ஆய்வு, அதிகாரிகளை கவர்னர் மாளிகைக்கு அழைத்து ஆலோசனை கூட்டம், உத்தரவு என கிரண்பேடி போட்டி அரசாங்கம் நடத்தியதால், கவர்னர் மற்றும் முதல்வர் இடையே அதிகார மோதல் வெடித்தது.

இதைதொடர்ந்து ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஆகியோர் 39 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து கவர்னர் மாளிகை முன் தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் மக்கள் நலத் திட்டங்களை தடுப்பதாலும், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த உத்தரவிட்டதால் பாஜவுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுகிறது என கூறி கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி பாஜகவினர் 5 முறை உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோருக்கு கடிதம் அனுப்பினர். அண்மையில் அமித்ஷாவை நேரில் சந்தித்த பாஜவினர் கிரண்பேடி விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என தெரிவித்திருந்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு திடீரென நீக்கினார். தெலங்கானா கவர்னராக உள்ள தமிழிசை புதுச்சேரி கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். அதன்படி, புதுச்சேரி துணை நிலை பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கான ஆணையை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் புதுச்சேரி ஆணையர் வழங்கினார். இதையடுத்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக தமிழிசை சௌந்தரராஜன் நாளை காலை 9 மணிக்கு பொறுப்பேற்கிறார்.


Tags : removal ,Deputy Governor ,Tamilisai Soundarajan ,Pondicherry , தமிழிசை சௌந்தரராஜன்
× RELATED புதுச்சேரி நிர்வாகம் சீர்குலைய துணை...