வால்பாறை : வால்பாறை மலைப்பாதையில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆழியாரிலிருந்து வால்பாறைக்கு செல்லும் இடம் பெரும்பாலும் மலைப்பாதையாக இருப்பதால், மழைக்காலத்தில் அவ்வப்போது மண் சரிவு ஏற்படுகிறது. மேலும், சாலை பழுதாகிறது. இதில், கடந்த சில நாட்களாக, பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் மலைப்பாதையில் ஆங்காங்கே சீரமைக்கும் பணி நடைபெற்றது.
இதில், நேற்று மலைப்பாதையில் நடைபெற்ற சாலை பணியால், சில இடங்களில் வாகனங்கள் விரைந்து செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் வெகுநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சாலை அமைக்கும் பணி நடந்தது. இதனால் பஸ், கார்களில் வந்த பயணிகள் விரைந்து செல்ல முடியாமல் தவித்தனர்.
சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கு மேல் வாகனங்கள் ஆங்காங்கே நின்றதால் வாகனங்களில் பயணம் செய்தோர் அதிருப்தி அடைந்தனர். எனவே, மலைப்பாதையில் சாலையமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், வாகன போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.