திம்பம்: சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் விதிமீறல்களில் ஈடுப்படும் லாரிகளை சிறைபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் திம்பம் மலைப்பாதையில் 16 டன் எடை கொண்ட கனரக லாரிகள் மட்டுமே செல்ல அனுமதி உள்ளது.
ஆனால் கூடுதல் பாரங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை அனுமதிப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதும், கொண்டைஊசி வளைவுகளில் வாகனங்கள் பழுதடைந்து நிற்பதும் தொடர் கதையாகி உள்ளது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து முடங்கும் சுழல் உருவாவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தாளவாடியில் ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளதால் அவசர சிகிச்சைக்கு விரைவாக செல்ல முடியாமல் உயிரிழப்பு ஏற்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதனை தொடர்ந்து மலை பகுதியில் சாகுபடி செய்யப்படும் பல டன் காய்கறிகளை உரிய நேரத்து அனுப்ப முடியாமல் வீணாவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விதிமீறல் நடைபெறாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் விதிமீறும் லாரிகளை சிறை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும், சோதனை சாவடியில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தாளவாடி கிராமமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.