ஹைதராபாத்: வீடு கட்டுவதற்காக விவசாயி ஒருவர் பெட்டியில் பாதுகாத்து வந்த 5 லட்சம் ரூபாயை கரையான்கள் தின்று தீர்த்துள்ள விசித்திர நிகழ்வு ஆந்திராவில் அரங்கேறியிருக்கிறது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மைலவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜமலையா. விவசாயியான இவர், வீட்டில் பன்றிகளையும் வளர்த்து வருகிறார். வேளாண் தொழிலில் பல ஆண்டுகளாக உழைத்து சிறிது சிறிதாக பணத்தை சேர்ந்த அவர், வங்கியில் கணக்கு இல்லாததால் வீட்டிலேயே இரும்பு பெட்டி ஒன்றில் அதனை பாதுகாத்து வைத்திருந்தார். இந்நிலையில் வீடுகட்டும் பணிக்கு பணம் தேவைப்பட்டதை அடுத்து பெட்டியை திறந்த ஜமலையா குடும்பத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது.
நீண்டகாலமாக பணத்தை பயன்படுத்தததால் ரூபாய் நோட்டுகளை கரையான்கள் சில்லறையாக துளைத்துவிட்டன. பெரும் இன்னல்களுக்கு இடையே சேமித்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை கரையான்கள் உணவாக்கிக் கொண்டதால் விவசாயி ஜமலையாவின் குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளது. வீடுகட்டும் தனது நீண்டநாள் கனவை கரையான்கள் கரைத்துவிட்டதாக விவசாயி ஜமலையா வேதனை தெரிவித்துள்ளார். வீடுகட்ட வைத்திருந்த கட்டுக்கட்டான ரூபாய் நோட்டுகளை கரையான்கள் கபளீகரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.