×

புதுமாப்பிள்ளை கொலை: உறவினர்கள் 3 பேர் கைது

பெங்களூரு: தங்களுக்கு விருப்பமில்லாத வாலிபரை திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் பெண்ணின் குடும்பத்தினர் பிறந்த நாள் வாழ்த்து கூறுவது போன்று நடித்து புதுமாப்பிள்ளையை கொலை செய்துள்ள சம்பவம் பெங்களூரு நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா ஹூலியூர் துர்கா பகுதியை சேர்ந்தவர் சேத்தன் (25). பெங்களூரு லக்கெரே பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த பூமிகா என்ற பெண்ணிற்கும் காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சேத்தன் அவரை, ரகசியமாக அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். இருவரும் லக்கெரே எல்.ஜி லே அவுட் பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தனர்.

முதலில் மறுப்பு தெரிவித்த குடும்பத்தினர் பின்னர், பூமிகாவையும் அவரது கணவர் சேத்தனையும் ஏற்று கொண்டனர். இந்நிலையில் நேற்று சேத்தனுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக பூமிகாவின் சகோதரர் ஆகாஷ், சித்தப்பா நஞ்ஜேஸ், உறவினர் திலீப் ஆகியோர் சென்றிருந்தனர். சகஜமாக அமர்ந்து பேசிகொண்டிருந்தபோது, திடீரென்று ஆகாஷ் மற்றும் அவரது நண்பர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சேத்தனின் இதயப்பகுதியில் குத்திவிட்டு, தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த சேத்தன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். கணவன் இறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூமிகா கூச்சலிட்டு கதறி அழுதார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ராஜகோபால்நகர் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அதில் இருவரின் திருமணத்தில் உடன்பாடு இல்லாமல் இந்த கொலை செய்திருப்பதாக தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ராஜகோபால்நகர் போலீசார் தப்பியோடிய ஆகாஷ், நஞ்ஜேஸ், திலீப் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : Pudumappillai ,murder ,relatives , Pudumappillai murder: 3 relatives arrested
× RELATED பந்தயத்தில் தோல்வியடைந்த...