தங்கவயல்: பி.இ.எம்.எல் பொது துறை நிறுவனத்தை தனியார் மயமாக்க கூடாது என்று பி.இ.எம்.எல் தொழிலாளர்கள் ஒரு மாத காலத்திற்கு தொடர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை, 1964ம் ஆண்டு ஐந்து கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட பி.இ.எம்.எல் பொது துறை நிறுவனம் இன்று 4ஆயிரம் கோடி மூலதனத்துடன் வளர்ந்துள்ளது. நாட்டின் ரயில்வே,மெட்ரோ ரயில், பாதுகாப்பு துறை தளவாடங்கள் என தன் தயாரிப்பு பங்களிப்பை தந்துள்ள பி.இ.எம்.எல். மத்திய அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை வரியாக அளித்துள்ளது. மேலும் இன்றைய நிலையில் பி.இ.எம்.எல். நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகளில் சொத்துக்கள் உள்ளது. ஏற்கனவே தங்க சுரங்கம் மூடப்பட்டு அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை தங்கவயல் மக்கள் நன்கு அறிவார்கள்.
எனவே பி.இ.எம்எல்லை தனியார் மயமாக்கி மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து போராட வேண்டும். எனவே 16ம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் வரை தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்துவோம் என்று கூறி இருந்தனர். அதன் படி நேற்று பகல் 3 மணியளவில் பி.இ.எம்.எல் டெக்னிக்னல் கேட் எதிரில் சங்க தலைவர் ஆஞ்சனேய ரெட்டி தலைமையில் தர்ணா போராட்டத்தை தொடங்கினர்.