சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று தனது டிவிட்டர்: கல்லூரி மாணவி, சூழியல் அக்கறையாளர் திஷா ரவியை கடுமையான வழக்குகளில் கைது செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தேசத்துரோகம் என்ற பெயரில் மாற்றுக்கருத்துகளின் குரல்வளையை நெரிப்பது, ஜனநாயகம் அளித்திருக்கும் கருத்துரிமைக்கு எதிரான கொடுஞ்செயல். பொதுநலனுக்காக போராடும்போது எல்லாம் தேசத்துரோக சட்டத்தின் பெயரால் மாணவர்களை அச்சுறுத்துவது, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலத்தின் அடாவடி.
அது இன்னும் தொடர்வது அவமானம். இந்த அச்சுறுத்தல் சட்டத்தின் மீது ஒரு பொது விவாதம் நிகழ்ந்தாக வேண்டும். மாணவர்களின் மீது அரசியல் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது. மாணவர்களின் தாக்கம் அரசியலில் இருப்பதே நியாயம். அடக்குமுறைகளுக்கு அடிபணியாத நெஞ்சுரத்துடன் நமது மாணவர்கள் இந்த சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.