×

பணி நிரந்தரம் இல்லை; பணம் கொடுத்தால் இடம் மாறுதல் டாஸ்மாக் துறையில் உச்ச கட்ட முறைகேடு: தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி) தலைவர் நா.பெரியசாமி

தமிழக அரசு சார்பில் டாஸ்மாக் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் கடைகள் அமைத்து மது விற்பனை செய்து வருகிறது. இதேபோன்று கேரளாவில் அரசு ஏற்று நடத்தி வருகிறது. கேரளா சென்று பார்த்தீர்கள் என்றால், ஒரு மதுக்கடை எப்படி இருக்க வேண்டும் என்று ஸ்டெக்சர் உள்ளது. பில்லிங் கவுன்டர் தனியாக இருக்கும். அதில், எல்லோரும் என்ன மதுவகை வேண்டுமோ அதற்கு பில் போட்டு, அந்த பில்லை எடுத்து கொண்டு போய் விற்பனை கவுன்டரில் கொடுப்பார்கள். அந்த பில்லை வாங்கி பார்த்து பாட்டில் தருவார்கள்.

இந்த இடத்தில் எந்த விதமான எம்ஆர்பியையும் மீறி பணம் வசூல் செய்ய வாய்ப்பில்லை. அந்த சிஸ்டம் தமிழகத்தில் இல்லை. இதனால், எம்பிஆர் விதிமீறலுக்கு இது முதல்படி. அது மாதிரி அங்கிருக்கும் கடைகள் எல்லாம் கணினிமயமாக்கப்பட்டன. அங்கு சரக்கு வந்தாலோ, போனாலோ எல்லாமே கணக்கில் வைக்கப்படுகிறது. ஒவ்வொன்றிற்கும் கியூ ஆர் கோடு இருக்கிறது. குறிப்பாக, ஒவ்வொரு பிராண்ட் பெயருக்கும் கியூஆர் கோடு இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு பாட்டிலுக்கும் கியூ ஆர் கோடு இல்லை.

ஒரு பிராண்ட் இருக்கிறது என்றால், அந்த பேட்ஜில் எவ்வளவு பாட்டில் இருக்கிறதோ அனைத்திற்கும் ஒரே கியூஆர் கோடுதான். ஆரம்பத்தில் சென்னை போன்ற நகரங்களில் பில்லிங் சிஸ்டம் இருந்தது. ஆனால், பில்லிங் சிஸ்டத்தில் குளறுபடி இருந்ததால் அந்த நடவடிக்கையே தோல்வியடைந்து விட்டது. அதில், என்ன குளறுபடி இருக்கோ, அதை நீக்கி, அதற்கு மேம்பட்டதாக ஆக்காமல் அப்படியே நிலுவையில் வைத்து விட்டனர். கேரளா போன்று, தமிழகத்தில் ஒரு கடை எப்படி இருக்க வேண்டும் என்கிற விதிமுறைக்கு விலக்கு இருப்பதால், ஒரு கடை எப்படி வேண்டுமானாலும் அமைக்கலாம் என்று உள்ளது.

ஒரு அரசாங்கமே ஒரு கடை எப்படி இருக்க வேண்டும் என்று சட்டத்தை போட்டு விட்டு அந்த சட்டத்தில் விதிவிலக்கு கொடுத்து எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம் என்று கூறுவது ஒரு அரசுக்கு முரணான செயல். இதுதான் அங்கு முதல் பிழை. ஒரு கடை எப்படி இருக்க வேண்டுமோ அந்த சூழ்நிலையில் இங்கு கடைகள் இல்லை. கடைகளுக்கு கழிப்பிட வசதி, காற்றோட்ட வசதி, குடிநீர் வசதி என எதுவும் இல்லாத சூழல் உள்ளது. கடைகள் நிறுவன சட்ட விதிவிலக்கை நீக்கி விட்டு, கேரளாவை போன்று கடைகள் இருக்க வேண்டும்.

இங்கு கடைகள் அதிகமாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் கடை வைக்க கூடாது என்று உத்தரவிட்டது. இதனால் கடைகள் பாதியாக குறைந்தது. ஆனால், இங்கு விற்பனை குறையவில்லை. வருமானமும் குறையவில்லை. அப்படி இருக்கையில் கடைகளை குறைத்து விட்டு, கேரளாவை போன்று கடைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளாவில் மது கூடங்கள் இல்லை. இங்குதான் கடைகளுடன் இணைந்து மதுக்கூடங்கள் உள்ளன. கேரளாவில் தனியாக, மதுக்கூடங்கள் வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மதுக்கூடங்களும் சுத்தமாக இருப்பதில்லை.

அந்த மாதிரி சிஸ்டத்தை தனியாக கொண்டு வர மறுக்கிறார்கள். இங்கு மதுக்கூடத்துடன் இணைந்த கடைகள் உள்ளன. மதுக்கூடங்களை வைத்திருப்போரின் கட்டுப்பாட்டில்தான் கடைகள் உள்ளன. இதனால், கடைகளை மூடுவதற்கு முன்னரும், கடைகளை திறப்பதற்கு பின்னரும் தமிழகத்தில் விருப்பப்பட்டால் மதுவகைகளை வாங்க முடியும். இதன் மூலம் பெரிய அளவில் விற்பனை நடக்கிறது. ஆனால், அந்த மாதிரி சிஸ்டம் கேரளாவில் கிடையாது. கேரளாவில் டாஸ்மாக் கடைகளில் நிரந்தர ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளம் வருகிறது. அங்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் உள்ளன. அந்த சலுகைகள் தமிழகத்தில் இல்லை.

இங்கு ஒரு விற்பனையாளரின் மாத ஊதியம் ரூ.9 ஆயிரம் தான். இது அவர்களின் வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. இதை வைத்துக்கொண்டு அவர்கள் கடைகளில் உடையும் பாட்டில்கள், இறக்கு கூலி, மின்சார கட்டணம், கடை வாடகையை தான் கட்ட வேண்டும். இதுபோக மாதம் மாத கப்பம் தர வேண்டும். இதனால் ஊழியர்கள் ஒரு பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிக விலை வைத்து விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த பணத்தில் அதிகாரிகள் முதல் அமைச்சர் பிஏ வரை அனைவருக்கும் கமிஷன் தர வேண்டும்.

ஆனால், ஊழியர்கள் ஏதோ அந்த மக்களிடம் கூடுதல் பணம் வாங்கி கொள்ளையடிப்பது போல் பிம்பம் உள்ளது. அவர்களுக்கு ஒரு பாட்டிலுக்கு ஒரு ரூபாய் மட்டுமே நிற்கிறது. மிச்சம் ரூ.4 வரை எல்லா வகையான செலவுகளுக்கு போய் விடுகிறது. பழியும், பாவமும் ஊழியர்களுக்குதான் உள்ளது. இதை நீக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு தான் உள்ளது. ஊழியர்களுக்கு எந்த விடுமுறையும் கிடையாது. தொழிலாளர் நல சட்டங்கள் இங்கு முழுமையாக அமலில் இல்லை.
வாடிக்கையாளர்கள் விரும்பும் மது வகைகள் கிடைப்பதில்லை. ஒரு ஓட்டலுக்கு சென்று விரும்புவதை சாப்பிடுவோம்.

ஆனால், டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலும் விரும்பும் சரக்கு கிடைப்பதில்லை. சில நேரங்களில் கிடைக்கும். அப்போது வேறுவழியில்லாமல் கிடைப்பதை குடிமகன்கள் வாங்கி குடிக்கின்றனர். மது உற்பத்தியாளரிடையே போட்டி காரணமாக அவர்கள் கொடுக்கும் கமிஷனுக்காக ஒரு குறிப்பிட்ட மதுவகையே அதிகளவில் மாநிலம் முழுவதும் விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் அந்த உரிமையாளருக்கு மட்டுமே கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகின்றனர். டாஸ்மாக் கடைகளில் ஒரு லாக்கர் கொடுத்துள்ளனர். அந்த லாக்கரில்தான் பணம் வைக்க வேண்டும். ஆனால், போலீஸ் அந்த லாக்கரில் பணம் வைக்காதீர்கள் என்று கூறுகின்றனர்.

அங்கு பணம் வைத்தால் முதல் குற்றவாளி நீதான் என போலீஸ் அடித்து அவனை பயமுறுத்துகின்றனர். வீட்டிற்கு எடுத்து போகலாம் என்றால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதை தடுக்க முயற்சி செய்கிறோம் என்று சொல்கின்றனர். ஆனால், அவர்கள் செய்வதில்லை. 3 ஆயிரம் கடைகளுக்கு கேமரா வைத்துள்ளனர். அந்த கேமராவும் கடைக்குள்ளும் வைத்துள்ளார்களே தவிர வெளியில் வைக்கப்படுவதில்லை. இதுபோன்ற சூழலை நீக்க அரசு முன்வர வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளான நிலையில், இப்போது வரை நிரந்தரம் செய்யப்படவில்லை. ஊழியர்கள் ஒவ்வொருவராக ஓய்வு பெற்று வருகின்றனர். பலர் ஓய்வு பெறும் நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் பிள்ளைகளின் வருங்காலம் என்னவாகும் என்ற மனநிலை உள்ளது. இதுவே அவர்களை தவறு செய்ய தூண்டுகிறது. அதே போன்று இடமாறுதலுக்கு இவ்வளவு பணம் கேட்கின்றனர். இங்கே பணம் கொடுத்தால் கேட்ட இடம் கிடைக்கிறது. இங்கு வெளிப்படைத்தன்மை இல்லாமல் உள்ளது. இதனால், இந்த துறையில் உச்சக்கட்ட முறைகேடு நடந்து வருகிறது. இதுவெல்லாம் களையப்பட வேண்டும். எனவே, கேரள முறையை பின்பற்றினால், இதுபோன்ற பிரச்னை எதுவும் வராது. நேர்மையாக இருப்பவர்கள் இங்கு வேலை செய்ய முடியாது. இங்கு ஒரு கடைக்கு இவ்வளவு மாமூல் என்று நிர்ணயித்து விட்டனர். அதை கொடுக்க வேண்டுமென்றால் அவர்கள் பொதுமக்களிடம் கூடுதலாக வசூலிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

Tags : Na ,Tamil Nadu ,Tasmag Employees Union ,AITUC ,Periyasamy , The task is not permanent; Tamil Nadu Tasmag Employees Union (AITUC) President Na. Periyasamy
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...