சென்னை : உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினரை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சி.எஸ்.கர்ணன். இவர் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அவர்களது குடும்ப பெண்கள், பெண் வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற பெண் பணியாளர்கள் ஆகியோரை அவதூறாக பேசி பல வீடியோக்களை வெளியிட்டார்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் கடந்த டிசம்பர் 2ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்க கோரி அவர் தாக்கல் செய்த மனுவை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.எஸ்.கர்ணன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.