×

பூச்சி முருகன் தலைமையில் வீட்டு வசதி வாரிய நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் பூச்சி எஸ்.முருகன் தலைமையில் வீட்டு வசதி வாரிய தொ.மு.ச. நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து, திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய கட்டுமான பணிக்கான டெண்டர் விட்டதில் 668 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்ததை வீட்டுவசதி வாரிய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆதாரங்களுடன் வெளியில் கொண்டு வந்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர்.

இந்த விவகாரம் குறித்து விருதுநகரில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது அழுத்தம் கொடுக்கவே இப்போது அந்த டெண்டர்கள் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சுக்கு கிடைத்த பெரிய வெற்றி. அதற்காக வீட்டுவசதி வாரிய தொ.மு.ச. பேரவை சார்பில் அதன் பொதுசெயலாளர் பூச்சி எஸ்.முருகன் தலைமையில் சங்க வழக்கறிஞர்கள் புகழ் காந்தி, முத்துக்குமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Tags : Housing Board Administrators ,MK Stalin ,Poochi Murugan , Meeting with MK Stalin, Housing Board Administrators led by Poochi Murugan
× RELATED அடுத்த பிரதமரை கைகாட்டும் கிங்...