சென்னை: சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 6,000 திமுகவினரை ஒரே இடத்தில் ‘உதயசூரியன்’ வடிவத்தில் நிறுத்தி, திமுக வெற்றிச் சின்னமான உதயசூரியனை உலக அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக ‘‘உதயசூரியன்-உலக சாதனை’’ - ‘மனிதர்களால் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் சின்னம் உதயசூரியன்’ எனும் ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’-ல் இடம் பெறும் சாதனை படைக்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி, சென்னை கொட்டிவாக்கம் பகுதியிலுள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நேற்று நடைபெற்றது.
இச்சாதனையில், மலைபோல் வடிவில் 2 ஆயிரம் பேரும், சூரியன் வடிவில் 1,500 பேரும், 5 பெரிய கதிர் வடிவில் தலா 300 பேர் என 1,500 பேரும், 4 சிறிய கதிர் வடிவில், தலா 250 பேர் என மொத்தம் 6,000 பேர் நின்றனர். சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ ஏற்பாட்டில் இந்த சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று, சாதனைப் படைத்த திமுகவினரை வாழ்த்தியதோடு, அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டார்.
சாதனைப் படைத்த திமுகவினரை வாழ்த்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உலக சாதனை படைக்கும் வகையில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், இந்தச் சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார். முதலில் அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை, பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த உலக சாதனை படைத்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்லுகிற அதே நேரத்தில், விரைவில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில், பிரசாரத்தை மேற்கொள்கிற போது, மக்களிடத்தில் காண்கின்ற எழுச்சியும் அந்த ஆர்வமும், ஆரவாரமும் 200 அல்ல, 234க்கு 234 இடங்களிலும் நிச்சயமாக திமுக அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
எனவே, எப்படி இன்றைக்கு நீங்கள் உலக சாதனை படைத்து இருக்கிறீர்களோ, அதேபோல நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில்-தமிழகத்தில் இந்தத் தேர்தல் நடந்தாலும், இந்திய அளவில், ஏன் உலக அளவில் ஒரு மிகப்பெரிய வெற்றியை நாம் பெறப் போகிறோம் என்றார். இந்நிகழ்ச்சியில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி, எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், வாகை சந்திரசேகர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, பாலவாக்கம் சோமு, பகுதி செயலாளர்கள் மதியழகன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டனர்.