சென்னை: விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி சேலம் - சென்னை சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்தியமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சென்னை வந்துள்ள மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதற்கிடையே, சென்னையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்தியமைச்சர் நிதின் கட்கரி, தமிழகத்தின் சாலை கட்டமைப்பை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டியது அவசியம். தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தலை வணங்குகிறேன் என்றார். 90% பேர் பாஸ்டேக் முறையை வரவேற்றதால் அதனை கொண்டு வந்துள்ளோம் என்றார்.
6 வழிச்சாலை அமைப்பதற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. ரூ.7,500 கோடி செலவில் சேலம் - சென்னை 6 வழிச்சாலை பணிகள் மேற்கொள்ளப்படும். நிலம் எடுக்கும் பணிக்காக மட்டுமே ரூ.2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சாலை அமைக்க கையகப்படுத்தும் நிலத்துக்கு சந்தை விலையை விட அதிக பணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தருகிறது.விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி சேலம் - சென்னை சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
மேலும் மத்தியமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில்,சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையில் ஈரடுக்கு பறக்கும் சாலை அமைக்க ஆலோசிக்கப்படும். சித்தூர்-தச்சூர் இடையே 3வது விரைவு சாலை அமைக்கப்படும். பெங்களூரு-சென்னை விரைவு சாலைக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 250 கி.மீட்டர் தூரத்தை 2.30 மணி நேரத்தில் கடக்கலாம் என்றும் தெரிவித்தார்.