×

நாளை ராகுல், பிப்ரவரி 25ல் மோடி புதுச்சேரியில் களைகட்டுகிறது பிரசாரம்

புதுச்சேரி: ராகுல்காந்தியைத் தொடர்ந்து பிப். 25ம்தேதி பிரதமர் மோடியும் ேதர்தல் பிரசாரத்துக்காக புதுச்சேரி வருகிறார். இதனால் தேர்தல் களம் களைகட்டத் தொடங்கி உள்ளது. சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக அகில இந்திய காங்கிரஸ்  கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை (17ம் தேதி) புதுச்சேரி வருகிறார். அப்போது மீனவர்கள், கல்லூரி மாணவிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாநில காங்கிரசார் மேற்கொண்டு வருகின்றனர். ராகுல்  வருகையால் காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் புதுச்சேரி வருகிறார். வருகிற 25ம்தேதி மாலையில் ரோடியர் மில்லில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  அதற்கு முன்பாக தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பிரதமரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மார்ச் 1ம்தேதி புதுச்சேரி வருகை தர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் புதுவை மற்றும் காரைக்காலில் நடைபெறும் கூட்டங்களில் அவர் பேசுகிறார்.  புதுச்சேரிக்கு தேசிய கட்சிகளின் தலைவர்களின் படையெடுப்பால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே தேர்தல் களம் களைகட்டத் தொடங்கியுள்ளது.



Tags : campaign ,Pondicherry , Rahul weeding campaign in Pondicherry tomorrow, February 25
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...