அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி ஊராட்சியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலை நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்திபட்டி ஊராட்சியில் உள்ளது லட்சுமி நகர். இந்த நகர் உருவாகி பல வருடங்களாகி விட்ட நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இப்பகுதி மக்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு வாறுகால், சிமென்ட் அமைக்கப்பட்டு வருகிறது. வாறுகால் முறையாக அமைக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
தெரு சந்திப்பில் போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. சாலை அமைக்கும் போதே மின்கம்பத்தை ஓரமாக வைக்க கோரி மின்வாரியம், ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், சாலை அமைத்தும் அவசரததிற்கு ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோ போன்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் மூன்று வெவ்வேறு பகுதியில் இருந்து வருகிறது.
இதனால் இங்கு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. ஒரு பகுதியில் மின்தடை செய்தால் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் தடைபடும். எனவே இங்குள்ள வீடுகளுக்கு ஏதாவது ஒரு பகுதியில் இருந்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறாக நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தை அகற்றி ஓரத்தில் வைக்க வேண்டும். வாறுகாலில் கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.