×

கடன் தருவதாக போன் அழைப்பில் வாடிக்கையாளர்களுக்கு தொல்லை கொடுக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை : மத்திய அரசு கடும் எச்சரிக்கை !!

புதுடெல்லி: போன் மூலம் தொடர்பு கொண்டு கடன் தருவதாக அழைத்து தொல்லை தரும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் டெல்லியில் உயர்மட்ட கூட்டம் நடந்தது. இதில், செல்போன் மூலம் கடன் தருவதாக அடிக்கடி குறுந்தகவல் அனுப்பப்படுவது, தொல்லை தரும் வரும் டெலிமார்க்கெட் போன் அழைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இது பற்றிய செல்போன் வாடிக்கையாளர்களின் புகார்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து, டெலிமார்க்கெட்டிங் மூலம் தொல்லை கொடுப்போர் மீது அபராதங்கள் விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அபராதத்திற்கு பிறகும் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு தொல்லை கொடுத்தால் குறிப்பிட்ட தொலைபேசி எண்களை துண்டிக்க தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.  தொலைதொடர்பு வசதிகளை பயன்படுத்தி நடக்கும் நிதி மோசடிகளை தடுக்க டிஜிட்டல் உளவு பிரிவு  ஒன்றை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் விரும்பத்தகாத வர்த்தக தகவல்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலமாக தொலைதொடர்பு சந்தாதாரர்களை துன்புறுத்தும் தொலைத்தொடர்பு சந்தையாளர்கள் மற்றும் தனி நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை மத்திய அமைச்சர்  கேட்டுக்கொண்டார்.தொலைதொடர்பு வசதிகளை பயன்படுத்தி நிதி மோசடிகள் செய்யப்பட்டு, சாதாரண மக்கள் பாடுபட்டு ஈட்டிய பணம் ஏமாற்றப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், இத்தகைய செயல்களை உடனடியாக நிறுத்துவதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.


Tags : companies ,customers ,Federal Government , மத்திய அரசு
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...