கோவை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது என 123 ேஜாடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, முதல்வர் பேசினார். கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி 123 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோவை பேரூர் செட்டிபாளையத்தில் நேற்று நடந்தது. உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து வைத்தார். கட்டில், மெத்தை, பீரோ, ஸ்டவ் உள்ளிட்ட 73 வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கி பேசியதாவது: வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி அதிமுக. தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்த ஆட்சியின் சாதனையாக, உள்ளாட்சி துறை பல விருதுகள் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது.
இதற்காக, தொடர்ந்து 3 முறை ஒரு பிரபல நாளிதழ் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் நிம்மதியாக வாழ சிறந்த மாநிலம் எது? என ஆய்வு நடத்தியபோது தமிழகம்தான் முதலிடம் வகித்தது. சிறந்த மாவட்டம் எது? என ஆய்வு நடத்தியபோது கோவை மாவட்டம் என தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுவே, தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதற்கு சிறந்த சான்று. தமிழகத்தில் சிறு, குறுந்தொழில் மேம்பாட்டுக்கு கடனுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை வழி நடத்தி செல்கிறார்’ என்றார். விழாக்குழு சார்பில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் வேலுமணி வெள்ளி செங்கோல் பரிசு வழங்கினார்.
கூட்டணி மாறினாலும் கொள்கை மாறாது
தமிழக கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பு மாநில மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் பேசுகையில், ஜெயலலிதா கிறிஸ்தவ கான்வென்ட் பள்ளியில்தான் படித்தார். எனது மகனும், ஏற்காட்டில் உள்ள ஒரு கிறிஸ்தவ கான்வென்ட் பள்ளியில்தான் படித்தார். ஒவ்வொரு தேர்தலிலும், அரசியல் கட்சிகள், மாறி மாறி கூட்டணி வைப்பது சகஜம். கொள்கை வேறு, கூட்டணி வேறு. கூட்டணி மாறினாலும், கொள்கைகளை அதிமுக விட்டுக்கொடுக்காது. எப்போதும் சிறுபான்மை மக்களுக்கு துணை நிற்போம் என்றார்.
வீரன் பொல்லானுக்கு சிலை, மணி மண்டபம் அருந்ததியர் 54 ஆயிரம் பேருக்கு பட்டா
குமாரபாளையத்தில் நேற்று நடந்த ஆதித்தமிழர் முன்னேற்ற அருந்ததியர் கழக அதிமுக ஆதரவு மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ஓடை புறம்போக்கு அல்லாத மற்ற இடங்களில் குடியிருக்கும் அருந்ததியர் சமுதாய மக்கள் 54 ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் பட்டா வழங்கப்படும் வீட்டு மனை இல்லாதவர்களுக்கு அரசே நிலம் வாங்கி காங்கிரீட் வீடுகளை கட்டி கொடுக்கும். தீரன் சின்னமலையின் படைத்தளபதிகளில் ஒருவரான வீரன் பொல்லான், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு முழு உருவ சிலையும், மணிமண்டபமும் அமைக்கப்படும். பொல்லானின் பிறந்த நாள் அரசு விழாவாக நடத்தப்படும். நான் சாதி, பேதம் பார்ப்பதில்லை. பட்டியலினத்தை சேர்ந்த சந்திரசேகரை மேலவை உறுப்பினராக்கியுள்ளேன். இதனால்தான் மக்களின் மகத்தான முதலமைச்சராக உயர்ந்துள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.