மதுரை: மதுரை மாவட்டம், அதலையைச் சேர்ந்த புஷ்பவனம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: இந்தியாவில் சுமார் 45 ஆயிரம் தாவர இனங்கள் உள்ளன. இதில் சுமார் 15 ஆயிரம் தாவரங்கள் குறித்தே வெளிப்படையாக தெரிகிறது. 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் இல்லை. குறிப்பாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான தாவர இனங்கள் உள்ளன. அழியும் நிலையிலுள்ள தாவரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், மனுவிற்கு மத்திய, மாநில அரசுகளின் வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை செயலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.