பெங்களூரு: ‘நாட்டில் பாஜவினருக்கு மட்டுமே சுதேசி கொள்கை உள்ளதாகவும் மற்றவர்கள் தேசத்தின் எதிரிகள்போல் காட்டி கொள்கிறார்கள். நாட்டின் விடுதலைக்கு பாஜவினர் பங்களிப்பு என்னவென்று கேட்டால் ஜீரோவாக தான் இருக்கும்’ என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ஜனநாயகத்தில் நீதிக்கும், நேர்மைக்கும் மதிப்பில்லாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் இடையில் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பொது விஷயத்தில் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் இணைந்து செயல்பட்ட வரலாறு உள்ளது. ஆனால் பாஜவின் வளர்ச்சி நாட்டில் தலைதூக்கிய பின் சமத்துவம் என்ற தத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக உயிரிழந்து வருகிறது. மாறாக பழி வாங்கும் அரசியல் தலைதூக்கியுள்ளது. அதற்கு உதாரணம் எதிர்கட்சிகளின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது சாட்சியாகவுள்ளது.
நாட்டில் பாஜவினருக்கு மட்டுமே சுதேசி கொள்கை உள்ளதாகவும் மற்றவர்கள் தேசத்தின் எதிரிகள் போல் காட்டிக்கொள்கிறார்கள். நாட்டின் விடுதலைக்கு பாஜவினர் பங்களிப்பு என்னவென்று கேட்டால் ஜீரோவாக தான் இருக்கும்.
அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதாக தீவிரவாத எதிர்ப்பு, இந்து மத பாதுகாப்பு, சுதேசி கொள்கை என போலி முகமுடியை மோடி கூட்டம் அணிந்து வருகிறது. தீவிரவாத எதிர்ப்பும், உள்நாட்டு பாதுகாப்பு என்பது 130 கோடி இந்தியனின் உணர்விலும் ஒன்றாக கலந்துள்ளது. அது பாஜவினருக்கு மட்டும் கிடையாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா என்ற குடையின் கீழ் தான் நாம் அனைவரும் இருக்கிறோம்’’ என்றார்.