×

அமைச்சர்கள் வேலுமணி, காமராஜ் மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை தேவை: திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு மனுவுக்கு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில், தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம்  செயல்படுத்தியதில் முறைகேடு செய்ததாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகவும், கொரோனா காலத்தில் மக்களுக்கு  தலா 5 கிலோ ரேசன் அரிசி கூடுதலாக வழங்க மத்திய அரசு அறிவித்த நிலையில், ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் வழங்கிவிட்டு, மீதமுள்ள அரிசியை நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்ததாக, உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு எதிராகவும் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு புகார் அளித்திருந்தார்.

இதன் மீது நடவடிக்கை இல்லாததால், அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகளை தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, அரசுத்தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உள்ளாட்சித் துறை அமைச்சர் மீதான புகார் குறித்து லோக்ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும், உணவுத்துறை அமைச்சர் மீதான புகார் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் வி.அருண் ஆஜராகி, ஏற்கனவே அரசு தரப்பின் இதே கருத்தை ஏற்க இரு நீதிபதிகள் அமர்வு மறுத்துள்ளது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்குகளில், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 5 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

Tags : Ministers ,MLA ,Kamaraj ,ICC ,Velumani ,DMK ,Appavu , Corruption Complaint, highCourt, Order
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...