திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் நா. செல்வசேகரன்(39). இவர் வைதிக மேடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். இவருடைய மனைவி ராஜாத்தி செல்வசேகரன் சோழவரம் ஒன்றிய பெருந்தலைவராக உள்ளார். இந்நிலையில், 2011ம் ஆண்டு முதல் எங்கு சென்றாலும், குறிப்பாக திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் கூட தொடர்ந்து கறுப்பு சட்டை அணிந்து வலம் வருகிறார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘என்னுடைய திருமணம் தலைவர் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
அப்போது துர்கா ஸ்டாலின், ‘‘இந்த நேரத்தில் ஏன் கருப்புச் சட்டையுடன் வரவேண்டும்?’’ எனக் கேட்டார் அப்போது அருகில் இருந்த மு.க. ஸ்டாலின், ‘‘கறுப்பு சட்டையுடன் வரவேண்டும் என்பது அவருடைய கொள்கை. அதில் நாம் தலையிடக் கூடாது.’’ என தெரிவித்தார். எனது திருமணத்தின்போதும், கருப்பு சட்டை அணிந்து சுயமரியாதை திருமணம் செய்து கொண்டேன். எங்கு சென்றாலும் கருப்புச் சட்டைதான் எனது அடையாளம். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று, மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆனதும், கருஞ்சட்டையில் இருந்து வெள்ளை சட்டைக்கு மாறுவேன்’’ என்றார்.