புதுடெல்லி : நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் பேசியபோது, ‘இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இடஒதுக்கீட்டு பலன்களை பெறமுடியுமா?’ என்று கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அளித்த பதிலில், ‘அரசியலமைப்புச் சட்டத்தின் (பட்டியல் வகுப்பு ஜாதிகள்) மூன்றாம் பத்தியில், இந்து, சீக்கிய, பவுத்த மதங்களை தழுவியோரை தவிர மற்றவர்கள் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்களாக கருதப்பட மாட்டார்கள்.
இந்து, பவுத்தம், சீக்கிய மதங்களை சேர்ந்த தலித்துகள் மட்டுமே இடஒதுக்கீட்டு பலன்களை பெற தகுதியானவர்கள். கடந்த 2015ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, இந்து மதத்தில் இருந்து வெளியேறி கிறிஸ்தவராக மாறியவர்கள் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்கள் அல்ல என்று தெரிவித்தது. எனவே, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்களை தழுவிய தலித் மக்கள் இடஒதுக்கீட்டு பயன்களை பெறவும், தனித்தொகுதிகளில் போட்டியிடவும் உரிமை கோர முடியாது’ என்றார்.