×

வீட்டை சுற்றி திடீர் போலீஸ் பாதுகாப்பு .. என்னை உளவு பார்க்கறீங்களா? : திரிணாமுல் எம்பி ஆவேசம்

புதுடெல்லி :மேற்குவங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா டெல்லியில் வீட்டில் தங்கியுள்ளார். அவரது வீட்டுக்கு திடீரென பிஎஸ்எப் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த மஹூவா மொய்த்ரா, டெல்லி போலீஸ் கமிஷனர் என்.என். ஸ்ரீவாஸ்தவாவுக்கு எழுதிய கடிதத்தில், ‘எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. எனது வீட்டின் முன் திடீரென பி.எஸ்.எப் போலீசாரை நியமித்து இருப்பது குறித்து எனக்கு தகவல் அளிக்கவில்லை. எனவே அவர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நான் ஒரு சாதாரண குடிமகளாக இருக்க விரும்புகிறேன்.

மூன்று பிஎஸ்எப் பாதுகாப்பு போலீசார் என்னை கண்காணிக்கின்றனர். அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் எனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்தனர். அவர்கள் எனக்கு பாதுகாப்பு அளிக்க வந்ததாக கூறுகின்றனர். எனக்கு பாதுகாப்பு கேட்டு யாரிடமும் விண்ணப்பிக்கவில்லை. என்னை காப்பாற்றிக் கொள்ள என்னால் முடியும். அதற்காக பொது பணத்தை வீணாக்க வேண்டாம். மக்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள். எனக்கு தேவையில்லை. அரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை. அப்படியிருக்க என் வீட்டின் முன் காவலர்கள் நிறுத்தப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் என்னை உளவு பார்க்க விரும்புகின்றனரா?’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : house , மஹுவா மொய்த்ரா
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்