×

பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமான தீர்ப்பு : பெண் நீதிபதியின் பதவிக்காலம் குறைத்து மகாராஷ்டிரா அரசு நடவடிக்கை

மும்பை : போக்சோ வழக்கில் சர்ச்சை தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதியின் பதவிக்காலத்தை ஓராண்டாக குறைத்து மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மகாராஷ்டிர மாநிலம் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் பணியாற்றும் கூடுதல் அமர்வு நீதிபதி புஷ்பா கனேடிவாலா, கடந்த மாதம் அளித்த இரண்டு தீர்ப்புகள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. அதாவது, ‘12 வயது சிறுமியின் ஆடையோடு உடம்பைத் தொடுவது போக்சோ சட்டத்தில் பாலியல் குற்றமாகாது. ஏனெனில் உடலோடு உடல் தொடர்பில் இல்லை’ என்று தீர்ப்பு வழங்கினார்.

மற்றொரு வழக்கில் 5 வயது சிறுமியின் கைகளைப் பற்றுவதும், பேண்ட் ஜிப்பை திறக்கச் செய்ய வைப்பதும் போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்றமாகாது என்று தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்புகளால், சம்பந்தப்பட்ட பெண் நீதிபதிக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையமும், குழந்தைகள் மனித உரிமை ஆணையமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதில் இரண்டு தீர்ப்புகளையும் நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில் நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளால் எழுந்த எதிர்ப்பை அடுத்து, கொலீஜியம் தனது பரிந்துரையை திரும்பப் பெற்றுக் கொண்டது.

மேலும் கூடுதல் அமர்வு நீதிபதியாக இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் நியமித்து கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநில அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிபதி புஷ்பா கனேடிவாலாவின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு பதில் ஓராண்டாக மட்டும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக கூடுதல் அமர்வு நீதிபதியாக ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவார். அதன் பின்னர் உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டு விடுவார். ஆனால் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளால் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கும் நீதிபதி புஷ்பாவிற்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : sex offenders ,Maharashtra ,judge ,govt , மகாராஷ்டிரா அரசு
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி