அம்பத்தூர்: அம்பத்தூர் கள்ளிக்குப்பம் சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியை சேர்ந்த கோமதிநாயகம்(57), கடலூரை சேர்ந்த முருகன்(37), கிருஷ்ணகிரியை சேர்ந்த கார்த்தி(35) உள்ளிட்ட டிரைவர்கள் லாரியை நிறுத்தி விட்டு தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, மொபட்டில் வந்த 3 வாலிபர்கள் லாரியில் ஏறி டிரைவர்களிடம் பணம் கேட்டு மிரட்டினர். கொடுக்க மறுத்ததால், லாரி கண்ணாடிகளை உடைத்து டிரைவர்களை கத்தியால் வெட்டி 3 செல்போன்கள், ரூ.9 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து தப்பினர். தகவலறிந்த அம்பத்தூர் போலீசார் சம்பவ இடம் வந்து படுகாயமடைந்த டிரைவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவள்ளூர் அடுத்த வயலாநல்லூர் மெயின் ரோட்டில் செல்லும் மணல் லாரிகளை தடுத்து டிரைவர்களிடம் சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக வெள்ளவேடு காவல் நிலையத்தில் லாரி டிரைவர் ஆயல்சேரி முருகன் புகார் கொடுத்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வெள்ளவேடு போலீசார் விரைந்து சென்று மணல் லாரிகளை தடுத்து நிறுத்தி, டிரைவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய வயலாநல்லூர் பழனி(48) மற்றும் செல்வம்(38) ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.