புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச்சில் மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்தது. இதனால், மத்திய அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன. பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் தற்போது 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு செல்கின்றனர். மற்றவர்கள் வீடுகளில் இருந்தபடி பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், மத்திய பணியாளர் அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நாட்டில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து விட்டதால், மத்திய அரசு பணியாளர்களின் அனைத்து பிரிவினரும், அரசு வேலை நாட்களில் கட்டாயம் பணிக்கு வர வேண்டும். இதில் இருந்து யாருக்கும், எந்த பிரிவினருக்கும் விலக்கு கிடையாது. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமே, அப்பகுதி விடுவிக்கப்படும் வரையில் அலுவலகத்துக்கு வரத் தேவையில்லை,’ என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.