×

தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு: நீர்நிலைகளில் 73 சிற்றினப் பறவைகள் பதிவு

கடையம்: மணிமுத்தாறு, அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், நெல்லை  மாவட்ட அறிவியல் மையம், நெல்லை இயற்கை சங்கம் மற்றும் தூத்துக்குடி முத்துநகர் இயற்கை கழகம் இணைந்து நடத்திய 11வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் 73 சிற்றினங்களைச் சேர்ந்த 26,868 பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன. இதுகுறித்து அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மைய ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கூறியதாவது: ஜனவரி 29, 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் நெல்ைல, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 62 குளங்களில் 120 தன்னார்வலர்கள் 7 குழுக்களாக பிரிந்து பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். இந்த கணக்கெடுப்பில் 73 சிற்றினங்களை சார்ந்த சுமார் 26,868 பறவைகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 4,371 சின்ன சீழ்கை சிறவி, 4,237 மஞ்சள் கொக்கு, 1,398 வலசை பறவைகளான மீசை ஆலா, 1,343 நாமத்தலை வாத்து, 1,223 வெண்புருவ வாத்து, 1,019 ஊசி வால் வாத்து ஆகியவை பதிவு செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளூர்குளத்தில் 30 சிற்றினங்களைச் சார்ந்த 3,578 பறவைகளும், ஆறுமுகமங்கல குளத்தில் 27 சிற்றினங்களைச் சார்ந்த 1,130 பறவைகளும் பதிவு செய்யப்பட்டன.  தென்காசி மாவட்டம் சுரண்டை குளத்தில் 33 சிற்றினங்களைச் சார்ந்த 2,566 பறவைகளும், சுந்தரபாண்டியபுரம் குளத்தில் 19 சிற்றினங்களைச் சார்ந்த 1250 பறவைகளும், வாகைக்குளத்தில் 30 சிற்றினங்களைச் சார்ந்த 1,193 பறவைகளும், நெல்லை  மாவட்டம் மானூர் குளத்தில் 30 சிற்றினங்களைச் சார்ந்த 1,627 பறவைகளும் பதிவு செய்யப்பட்டன. கங்கைகொண்டான் குளத்தில் நத்தை குத்தி நாரை, பாம்புத்தாரா, நீர்க்காகம், வெள்ளை அரிவாள் மூக்கன் ஆகிய பறவைகளின் கூடுகள் காணப்பட்டன. நெல்லை  நயினார்குளக் கரையில் உள்ள மரங்களில் நூற்றுக்கணக்கான பாம்புத்தாரா குஞ்சுகள் காணப்பட்டன. மானூர், மாறாந்தை குளங்களிலும் பறவைகள் கூடுகள் அமைத்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதை காண முடிந்தது.

சைபீரியா நாட்டுப் பறவையினமான கருவால் மூக்கான், முக்கூடல் அருகே உள்ள செங்குளத்திலும், தாழையூத்து அருகே உள்ள கல்குறிச்சி குளத்திலும் காணப்பட்டன. இப்பறவை இனமானது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தால் அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நெல்லை மாவட்டம், சிவந்திப்பட்டி கிராமத்தில் உள்ள வேப்பன்குளத்தில் மங்கோலியா நாட்டில் இருந்து வரும் வரித்தலை வாத்துகள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. இவை மிக உயரமாக பறக்கும் பறவைகளில் ஒன்றாகும். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டு பறவைகளின் எண்ணிக்கை சற்றுக் குறைந்தே காணப்பட்டன. வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாதத்தில் அதிக மழைப் பொழிவு ஏற்பட்டதால் அனைத்துக் குளங்களும் நிரம்பி காணப்பட்டன. எனவே பறவைகளும் பல குளங்களில் பரவி காணப்பட்டன. குளங்களில் தண்ணீர் நிரம்பி வழிவதால் உள்ளான், நாரை போன்ற கரையோர பறவைகள் அதிகம் காணப்படவில்லை.

நெல்லை  வேய்ந்தான்குளத்தில் சென்ற ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பறவைகளும் கூடுகளும் காணப்பட்டன. தற்போது இந்தக் குளத்தில் குப்பைகள் அதிகமாகக் கொட்டப்பட்டு பராமரிப்பின்றி இருப்பதால் பறவைகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அரசுத்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து குளங்களை வளங்குன்றாத வகையில் பாதுகாக்க செயல்திட்டம் வகுத்து செயல்பட வேண்டும். உயிரி பல்வகைமைச் சட்டம் 2002ன் படி உள்ளாட்சி அமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள உயிரி பல்வகைமை மேலாண்மைக் குழுக்களுக்குத் தேவையான பயிற்சி வழங்கப்பட்டு கிராம மக்களை குளங்கள் மற்றும் அதைச் சார்ந்த பல்லுயிரினங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags : water bodies , Tamiraparani Aquatic Birds Survey: Record of 73 species of birds in water bodies
× RELATED புழல் ஏரியில் நீர் இருப்பு அதிகம்...