×

சட்டமன்ற தேர்தல்-2021 ரவுண்ட் அப்: ஊட்டியில் ஊசலாடும் அ.தி.மு.க.

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தின் மைய தொகுதியாக ஊட்டி சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் 20.01.2021 நிலவரப்படி 2 லட்சத்து 5 ஆயிரத்து 138 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். இத்தொகுதியில், கடந்த 1957ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை நடந்த தேர்தலில், காங்கிரஸ் 9 முறை வென்றுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. தலா 2 முறை வென்றுள்ளது. இம்மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக பசுந்தேயிலை உள்ளது. இதற்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பத இத்தொகுதி மக்களுக்கு ெபருத்த ஏமாற்றமாக உள்ளது. உரிய விலையின்றி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாக அவதிப்படுகின்றனர். தேயிலை விவசாயிகளுக்கு அரசு சார்பில் முழு அளவில் மானியம் வழங்கப்படுவது இல்லை. கூட்டுறவு தொழிற்சாலையில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது.

மீதமுள்ள தேயிலை விவசாயிகள் வஞ்சிக்கப்படுகின்றனர். ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தார்சாலை, தெருவிளக்கு, சாக்கடை கால்வாய், குடிநீர் வசதி, சுகாதார மேம்பாடு என எவ்வித அடிப்படை கட்டமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் ஊட்டிக்கு, மூன்றாவது மாற்றுப்பாதை அமைக்கும் திட்டம் தொடர்ந்து கிடப்பிலேயே உள்ளது. மூன்றாவது மாற்றுப்பாதை அமைக்க தேர்வு செய்யப்பட்ட மஞ்சூர், கெத்தை, முள்ளி சாலை புதர்மண்டி கிடக்கிறது. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மூன்றாவது குடிநீர் திட்டம் கொண்டுவர வேண்டும் என இத்தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், தமிழக அரசு நிறைவேற்றவில்லை. ஊட்டி மக்களின் முக்கிய பிரச்னையான மாஸ்டர் பிளான் சட்டத்தில் தளர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுவும், கிடப்பிலேயே உள்ளது. இத்தொகுதியில், சுற்றுலா வளர்ச்சிக்காக கேபிள் கார் திட்டம், ஹெலிகாப்டர் சேவை வேண்டும் என பல ஆண்டுகளாக ெதாடர்ந்து கோரிக்கை விடுக்கப்படுகிறது. இதை, அரசு கண்டுகொள்ளவில்லை. மலை மாவட்டமான இத்தொகுதிக்கு, மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி ேவண்டும் என இங்குள்ள மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், காது கொடுத்து கேட்க ஆட்சியாளர்கள் தயாராக இல்ைல. படுகர் இன மக்களை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க வேண்டும். ஈழுவா தீயா மக்களுக்கு சாதிச்சான்றிதழ் கிடைப்பதில் உள்ள சிக்கலை போக்க வேண்டும். படுகர் இன மக்களை, பழங்குடியினர் பட்டியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. தேயிலைக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். சுற்றுலா தளங்களை மேம்படுத்த வேண்டும். கிராமங்களுக்கு செல்லும் சாலைகளை சீரமைக்க ேவண்டும். ஊட்டி எச்.பி.எப். தொழிற்சாலையை புனரமைக்க வேண்டும் என்பது ஊட்டி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கை. ஆனால், கண்டுகொள்வார் யாருமில்லை.

இப்படி அடுக்கடுக்கான கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஆட்சியாளர்கள் மீது இத்தொகுதி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஆனால், இத்தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. பிரபலங்கள் மல்லுக்கட்டுகின்றனர். தற்போது அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக உள்ள கப்பச்சி வினோத் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் புத்திச்சந்திரன் ஆகியோர் இத்தொகுதியில் போட்டியிட மும்முரம் காட்டி வருகின்றனர். இவர்களில், யாருக்கு சீட் கிடைக்கப்போகிறது என்பது புதிராக உள்ளது. ஏற்கனவே, கடந்த 2011 முதல் 2016ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் புத்திச்சந்திரன். சில மாதங்கள் சுற்றுலாத்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். ஆனால், இவர் நீலகிரி மாவட்டத்திற்கென சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு திட்டங்களும் கொண்டுவரவில்லை. அதனால், இவர் மீதும், ஆளும் அ.தி.மு.க. மீதும் இத்தொகுதி மக்கள் கடுப்பில் இருக்கின்றனர்.

எனவே, இத்தொகுதி எப்போதும் அ.தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும், போட்டியிட கடும் போட்டி
நிலவுகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, புத்திச்சந்திரன், கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதன்பின், உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு நெருக்கமாக இருந்ததால், மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி கிடைத்தது. ஆனால், ஏராளமான புகார் எழுவே மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி பறிபோனது. எனினும், இவர் உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர் என்பதால், தனக்கே மீண்டும் சீட் கிடைக்கும் எனக்கூறி வருகிறார். இது மட்டுமின்றி, தேர்தல் பிரச்சார பணிகளையும் துவக்கிவிட்டார். அதேசமயம், தற்போதுள்ள மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், ஜெயலலிதாவிடம் தனக்கென ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தி வைத்திருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, பலர் சீட் கேட்டு தலைமைக்கு படையெடுத்த போதிலும், இளம்வயதுடைய கப்பச்சி வினோத்திற்கே சீட் கொடுத்தார் ஜெயலலிதா.

ஆனால், உட்கட்சி பூசல் காரணமாக, இவரை ஆளுங்கட்சியினரே தோற்கடித்தனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருப்பதால், கடனுதவிகளை வழங்கினார். இதன்மூலம், மக்கள் மத்தியிலும், கட்சியினர் மத்தியிலும் நல்ல பெயரை சம்பாதித்துள்ளார். அதனால் இவர், மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியில் நல்ல பெயர் வாங்கியுள்ளதால், இம்முறை இவருக்கே இத்தொகுதியில் சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், புத்திச்சந்திரன் தனக்கே சீட் கிடைக்கும் எனக்கூறி, களத்தில் இறங்கி வேலை செய்து வருவதால், மல்லுக்கட்டு தொடர்கிறது. இத்தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கணேஷ். இவர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவருக்கு, தொகுதிக்குள் நல்ல பெயர் உள்ளது.

கடந்த முறை, தி.மு.க. கூட்டணியில் இவர் மகத்தான வெற்றி பெற்றார்.  கடந்த 5 ஆண்டு காலத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறைவேற்றியுள்ளார். ஊட்டியில் மருத்துவக்கல்லூரி வருவதற்கு பல்வேறு சமயங்களிலும் சட்டசபையில் குரல் கொடுத்துள்ளார். அதேபோல், மத்திய பஸ் நிலையம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். எனவே, தி.மு.க. கூட்டணியில், இத்தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், இவருக்கே மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல், வெற்றி வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

Tags : Assembly Election ,Round Up ,AIADMK ,Ooty , Assembly Election-2021 Round Up: AIADMK oscillating in Ooty.
× RELATED 102 தொகுதிகளில் முதற்கட்ட...