×

மேக் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட அதி நவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி சிறப்புகள்!

சென்னை: மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி டாங்கி சென்னை ஆவடியில் உள்ள கன ஊர்தி தொழிற்சாலையில், ரூ.8,400 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தளவாடமானது 15 கல்வி நிறுவனங்கள், 8 ஆய்வகங்கள் மற்றும் பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்துடன் டி.ஆர்.டி.ஓ இணைந்து அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை உருவாக்கியுள்ளது. இந்த அதிநவீன பீரங்கியைப் பயன்படுத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, 118 அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி டாங்கி வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவம் எல்லையில் ஏற்கெனவே 124 அர்ஜுன் பீரங்கிகளை பயன்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, கூடுதலாக இந்த 118 அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனங்களும் சேர்கின்றன.

ஒவ்வொரு அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனமும் 58.5 டன் எடை கொண்டது. 10.638 மீட்டர் நீளமும் 9.456 மீட்டர் உயரமும் கொண்டது. அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனம் 1,400 குதிரை சக்தி திறனுடன் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பீரங்கி வாகனம் நவீன 120 மி.மீ துப்பாக்கியுடன் இயங்குவதோடு எந்த நேரத்திலும் எந்த தட்ப வெப்பத்திலும் தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி இரவு நேரத்திலும் இலங்குகளை துல்லியமாக அறிந்து தாக்குதல் நடத்தும் வகையில், தெர்மல் இமேஜிங் என்கிற பிரத்யேக வசதிகொண்ட அதி நவீன கேமரா உள்ளது. அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனங்கள் சமதளப் பரப்பில் மணிக்கு 70 கி.மீ வேகத்திலும் மேடு பள்ளங்கள் நிறைந்த மலைப்பகுதிகளிலும் மற்றும் கடுமையான நிலப்பகுதியிலும் மணிக்கு 40 கி.மீ வேகத்திலும் இயங்கும் திறன் கொண்டவை.

தரைவழி மற்றும் வான்வழி இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க இரண்டாம் நிலை ஆயுதங்களாக 7.6 மி.மீ மற்றும் 12.7 மி.மீ 2 உயர் ரக துப்பாகிகளும் இந்த அதிநவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனத்தில் இடம்பெற்றுள்ளன. ஒரு அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனத்தை காமண்டர், பீரங்கியை சுடுபவர் உள்பட 4 பேர் இயக்கலாம். 1970களில் அர்ஜுன் ரக பீரங்கிகள் உருவாக்கப்பட்டபோது, டி.ஆர்.டி.ஓ கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆனால், அது பல கட்ட ஆய்வுகளைக் கடந்து பல தரப்பினரின் ஆலோசனைகளுக்குப் பிறகு, தயாரிக்கப்பட்டுள்ள இந்த அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கிகள் தற்போது இருக்கும் பீரங்கிகளைவிட அதிக சக்தி வாய்ந்த அதி நவீன பீரங்கிகளாக உள்ளன. அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனங்களை இன்று சென்னையில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த பீரங்கிகள் இந்திய ராணுவத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்க உள்ளது.

Tags : Arjun Mark 1A ,India , State-of-the-art Arjun Mark 1A cannon specials made under the Mac India project!
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!