×

பவானிசாகர் அருகே இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே உள்ள தொகுப்பு வீடுகள் எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. கூலித் தொழிலாளர்கள் குழந்தைகளுடன் அச்சத்தில் வசித்து வருகின்றனர். பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம் விண்ணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது அன்னே கவுண்டன் பாளையம் கிராமம். இக்கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு உள்ள ஆதிதிராவிடர் காலனியில் ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 21 தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டது. தரமற்ற கட்டுமானத்தால், இந்த தொகுப்பு வீடுகள் கடந்த 10 ஆண்டுகளாக சிதிலமடைந்து மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்த நிலையில்  பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் தொகுப்பு வீட்டை காலி செய்துவிட்டு அக்கம்பக்கம் குடிசை அமைத்து தங்கியுள்ளனர். மேலும் ஒரு சில வீடுகளில் குடியிருக்கும் கூலித் தொழிலாளர்கள் எப்போது மேற்கூரை கான்கிரீட் மற்றும் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுமோ? என்ற அச்சத்துடன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வசித்து வருகின்றனர்.மேலும் மழைக்காலங்களில் மேற்கூரை கான்கிரீட்டில் மழைநீர் புகுந்து வீட்டிற்குள் தண்ணீர் நிற்பதோடு, தரக்குறைவான கட்டுமானத்தால், கிராம மக்கள் அச்சத்துடன் வாசிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள  வீட்டில் வசிக்கும் ரூபா என்ற இளம்பெண்ணுக்கு கடந்த மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்தப் பெண் இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வரும் காட்சி காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

இடிந்து விழுந்து சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடு கட்டித் தரக்கோரி சம்பந்தப்பட்ட விண்ணப்பள்ளி ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை முறையிட்டும் இதுவரை ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் வரும் நேரத்தில் வந்து வாக்கு கேட்டுச் செல்லும் அரசியல் கட்சியினர் வெற்றி பெற்றபின் இக்கிராமத்தை எட்டிக்கூடப் பார்ப்பதில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அன்னே கவுண்டன் பாளையம் கிராமத்தில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதியதாக வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்பதே இக்கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : houses ,Bhavanisagar , Set houses collapsing near Bhavani Sagar
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்