×

சமையல் நிறுவன கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 துப்புரவு பணியாளர்கள் உயிரிழப்பு...! ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்ரம்பாக்கம் பகுதியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். சமையல் நிறுவன கழிவு நீர் தொட்டியில் சுத்தம் செய்த முருகன், பாக்யராஜ், ஆறுமுகம் ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் வெங்கடேஸ்வரா உணவு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் இருந்து சிப்காட்டில் உள்ள பல கம்பெனிகளுக்கு உணவு பரிமாறப்படுகிறது. இந்த நிலையில், அந்த உணவு நிறுவனத்தில் இருக்கும் பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த நிறுவனத்தின் உரிமையாளர் 3 துப்புரவு பணியாளர்களை அழைத்திருக்கிறார். இன்று காலை முருகன், பாக்கியராஜ், ஆறுமுகம் ஆகிய 3 பேரும் சாக்கடை அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அதிலிருந்து வெளிப்பட்ட விஷவாயு தாக்கியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நிறுவனத்தின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் தமிழகத்தில் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மலக்குழிகளில் மனிதர்களை இறக்கக் கூடாது என்ற விதிகளை மீறி, பல இடங்களில் இச்சம்பவம் தொடருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.

Tags : poison gas attack ,Sriperumbudur , 3 cleaners killed in poison gas attack on cooking company waste water tank ...! Tragedy near Sriperumbudur
× RELATED ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு