கொடைக்கானல்: கொடைக்கானல் பெருமாள் மலை அருகே தோகைவரை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அரியவகை மரங்கள், மூலிகைச்செடிகள் எரிந்து சாம்பலானது. கொடைக்கானல் மலைப்பகுதியில் 15 நாட்களுக்கு மேலாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் கொடைக்கானலில் வறண்ட சூழ்நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக தனியார்களின் பட்டா நிலங்கள், வனத்துறை, மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான நிலங்கள் வறண்டு உள்ளது. இந்த நிலையில் கொடைக்கானல் பெருமாள்மலையை அடுத்த தோகைவரை பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் நேற்று முன்தினம் காட்டுத்தீ ஏற்பட்டது.
இந்த தீ விபத்தின் காரணமாக அரியவகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் எரிந்து சாம்பலாகின. இந்நிலையில் வனத்துறையின் சார்பில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.த இரண்டு நாட்களாக போராடி வனத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், இந்த தீ விபத்தால் இப்பகுதிகளில் வசிக்கும் வனவிலங்குகள் இடம் பெயர்ந்து கிராமங்களுக்குள் புகுந்து விடும் சூழ்நிலை உள்ளது. அடிக்கடி இப்படி தீ விபத்து ஏற்படுகிறது. இதனைத் தடுக்க வனத்துறையினர் மேலும் கூடுதல் பணியாளர்களை நியமித்து தீ ஏற்படும் பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்றனர்.