சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று சிறை காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தேர்தலில் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்பது கடமையாகவே கூறப்பட்டுள்ளது. அதேபோல், தேர்தலின்போது 100 சதவீதம் வாக்களிப்பது குறித்தும் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதுதவிர தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், போலீசார் மற்றும் ராணுவ வீரர்களுக்கு தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்குகளை பதிவு செய்யும் வாய்ப்பையும் வழங்கி வருகிறது. ஆனால், தமிழக சிறைகளில் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் சொந்த மாவட்டங்களை விட்டு, பிற மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2016 மற்றும் 2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில், தமிழக சிறைகளில் பணியாற்றும் காவலர்களுக்கு தபால் ஓட்டு கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம், காவலர்கள் கேட்டதற்கு சரியாக பதில் அளிக்கவில்லையாம். தேர்தல் தேதி அன்று விடுமுறை கேட்டதற்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பதால் விடுமுறை அளிக்க மறுத்துவிட்டனராம். இதனால் அப்போது, தேர்தலின் போது வாக்களிக்கும் உரிமை இருந்தும், வாக்களிக்க முடியாமல் போனது. இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளதால், சிறைகளில் பணியாற்றும் வெளி மாவட்ட காவலர்களுக்கும், தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்குரிமையை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறை காவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.