சூரத்: உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து, அயோத்தியில் மிகவும் பிரமாண்டமான ராமர் கோயிலை கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பொறுப்பை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஏற்றுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி இக்கோயிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்று, பிரதமர் மோடி அடிக்கல்லை நாட்டினார்.இக்கோயிலை கட்டுவதற்காக அரசிடம் இருந்து நிதி பெறப்படாது என்று தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஏற்கனவே அறிவித்து விட்டது. இதனால், உலகம் முழுவதிலும் மக்களிடம் இருந்து இதற்காக நன்கொடையை அது திரட்டி வருகிறது. இது குறித்து அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி நேற்று அளித்த பேட்டியில், “ராமர் கோயில் கட்டுவதற்காக மக்களிடம் இருந்து இதுவரையில் 1,511 கோடியை அறக்கட்டளை திரட்டியுள்ளது,” என்றார்.