மதுரை: தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறுமென மதுரையில் வைகோ தெரிவித்தார். மதுரையில் நேற்று மதிமுக சார்பில் நடந்த நிதி அளிப்பு விழாவில் பங்கேற்ற, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: மதிமுக போட்டியிடும் தொகுதியில் மட்டுமின்றி, அனைத்து தொகுதிகளிலும் நான் பிரசாரம் மேற்கொள்வேன். நிச்சயமாக வரும் தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார். தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். லட்சக்கணக்கான மக்கள் ஆதரவு தருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்தனை ஆண்டு காலம் தூங்கி விட்டு தற்போது அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு வருகிறார். தமிழகத்திற்கு வர வேண்டிய எந்த திட்டமும் வரவில்லை. வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இந்த தேர்தலில் அதிமுகவையும் பாஜவையும் தோற்கடித்தே ஆக வேண்டும் என்பதால், எத்தனை இடம் கொடுத்தாலும் போட்டியிட தயாராக இருக்கிறோம். புதிதாக எந்த கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு இல்லை. எனது மகன் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார். கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வர வேண்டிய அவசியம் இப்போது இல்லை. முதியவர்களுக்கு தபால் வாக்கு வழங்குவது சரி என்பதே எனது கருத்து. 7 தமிழர் விடுதலை விவகாரம் என்பது மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து நடத்தும் கபட நாடகம். அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை நாசமாக்கியதை சொல்லி, மக்களிடம் இந்த தேர்தலில் வாக்கு கேட்போம் என்றார்