* மேற்கூரையில் போட்ட மற்றொரு குழந்தை தப்பியது
* தஞ்சையில் வனத்துறை அலட்சியத்தால் பரிதாபம்
தஞ்சை: தஞ்சாவூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த, பிறந்து ஏழே நாளான இரட்டைக் குழந்தைகளை குரங்குகள் தூக்கி சென்றன. இதில் குளத்தில் வீசியதில் ஒரு குழந்தை இறந்தது. மற்றொரு குழந்தையை வீட்டு மேற்கூரையில் போட்டதால் உயிர் தப்பியது. தஞ்சாவூர் மேலவீதி கோட்டை அகழியை சேர்ந்தவர் ராஜா (29). பெயின்டர். இவரது மனைவி புவனேஸ்வரி (26). இவர்களுக்கு ஜீவிதா (5) என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 7 தினங்களுக்கு முன் புவனேஸ்வரிக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. நேற்று மதியம் 1.30 மணியளவில் இரண்டு குழந்தைகளையும் வீட்டின் நடுவே பாயில் படுக்க வைத்துவிட்டு, புவனேஸ்வரி, மற்றொரு பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்றார். சிறிது நேரத்தில் குரங்குகளின் சத்தம் கேட்டுள்ளது. வீட்டுக்குள் குரங்குகள் வந்து மளிகை சாமான், உணவு பொருட்களை எடுத்து செல்வது வழக்கமாக இருந்ததால், உடனே கழிவறையை விட்டு வேகமாக வந்து பார்த்த புவனேஸ்வரி இரண்டு குழந்தைளையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். வௌியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு பார்த்தபோது வீட்டின் மேற்கூரையில் ஒரு குரங்கு குழந்தையுடன் அமர்ந்திருந்தது.
உடனடியாக புவனேஸ்வரி சத்தம் போட்டதும், உறவினர்கள் ஒன்று கூடினர். பின்னர் எல்லோரும் சத்தம் போட்டதும் குழந்தையை மேற்கூரையிலேயே போட்டுவிட்டு குரங்கு ஓடிவிட்டது. இன்னொரு குழந்தையை உறவினர்கள் தேடியபோது, வீட்டின் பின்புறம் உள்ள குளத்தில் கிடந்ததை கண்டுபிடித்து மீட்டனர். உடனடியாக தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் புவனேஸ்வரியும், உறவினர்களும் கதறி அழுதனர். இந்த பகுதியில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள், வீட்டுக்குள் அடிக்கடி புகுந்து பொருட்களையும், உணவுகளையும் எடுத்துச் செல்வதாக வனத்துறைக்கு மக்கள் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். வனத்துறையினரின் அலட்சியத்தாலேயே குழந்தையை குரங்குகள் தூக்கிச் சென்று கொன்ற விபரீதம் நடந்துள்ளது என அப்பகுதியினர் குற்றம் சாட்டினர். புகாரின்படி, தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.