கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கத்தில் புதிதாக அமையவுள்ள பஸ் நிலைய பணிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை ஆய்வு செய்தார். வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் நிலப்பரப்பில் ₹314.86 கோடியில் நவீன பஸ் நிலையம் அமைப்பதாக கடந்த 2016ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு பணி தொடங்கியது. ஆனால், இதுவரை அந்த பணிகள் நிறைவாடையாமல், வரும் மார்ச் மாதம் வரை பணிகள் நடக்கும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பஸ் நிலையம் அமைக்கும் பணியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை செய்தார். மாநகர மற்றும் அரசு பஸ்கள் வந்து செல்வதற்காக நுழைவாயிலில் நடந்து வந்த பணி, தற்போது முடிவடைந்து விட்டது. ஆனால், பின்புறத்தில் தென் மாவட்டங்களுக்கு அரசு விரைவு பஸ்கள் சென்று வருவதற்காக கட்டப்படும் பஸ் நிலைய பணி இன்னும் முடிவடையவில்லை.
சட்டமன்ற தேர்தலுக்குள் மேற்படி பஸ் நிலையத்தை திறந்து வைக்க வேண்டும். மாநகர பஸ்கள் வந்து செல்ல பஸ் நிலையத்தை முன்கூட்டியே திறந்து வைக்கவும் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. அதன் திறப்பு விழா வரும் 24ம் தேதி அல்லது இம்மாத இறுதிக்குள் நடைபெறலாம் என கூறப்படுகிறது. அவருடன் முன்னாள் எம்பிக்கள் கே.என்.ராமச்சந்திரன், சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்பட பலர் இருந்தனர். சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், துணை முதல்வர் ஆய்வு செய்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.