சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதை எதிர்த்து இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நேற்று நீதிபதி புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இரு எம்டெக் படிப்புகளை தொடங்குவதற்கான கால அவகாசம் கடந்த ஆண்டு டிசம்பரோடு நிறைவடைந்து விட்டதால் தற்போது அனுமதி அளிக்க முடியாதென தெரிவித்தார்.அரிதான சூழலை கருத்தில் கொண்டு இது தொடர்பாக அகில இந்திய கல்வி கவுன்சிலிடம் கேட்டு மீண்டும் பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, ஏன் இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகமோ மாநில அரசோ உச்ச நீதிமன்றத்தை நாடி தீர்வு காணக்கூடாது என கேள்வி எழுப்பினார்
மேலும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிடமும், அண்ணா பல்கலைக் கழகத்திடமும் உரிய விளக்கம் பெற்ற தெரிவிக்குமாறு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டார் .பின்னர் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் சார்பில் ஆஜரான வக்கீல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மனுதாரர் தரப்பு வக்கீல் சரவணன் தமிழக அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் திங்கட்கிழமை நடைபெறும் என்று தள்ளிவைத்தனர்.