×

சட்டப்பேரவை தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுப்பு வருவாய்த்துறை, காவல்துறை களம் இறங்கியது

வேலூர்: சட்டப்பேரவை தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் வருவாய்த்துறையினருடன் இணைந்து காவல்துறை களம் இறங்கி உள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். தேர்தலுக்கான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து  தொகுதிகளிலும் விவிபேட் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஊரக, நகர, பேரூராட்சிகள், மாநகராட்சி என அனைத்து பகுதிகளிலும் தனித்தனியாக பதற்றமான வாக்குச்சாவடி மற்றும் மிக பதற்றமான வாக்குச்சாவடி பட்டியலை வருவாய்த்துறை மற்றும் காவல்துறை இணைந்து பட்டியல்  தயாரித்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.அதில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என தனித்தனியாக பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்படுள்ளது. மேலும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்தும் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:பதற்றம் மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் பட்டியலை வருவாய்த்துறை, காவல்துறை ஆகிய 2 துறைகள் இணைந்து தயாரித்து வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த  விஏஓக்கள், வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார்கள், காவல்துறை சார்பில் அந்தந்த காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு போலீசார் மற்றும் எஸ்பிசிஐடி உளவுப்பிரிவு போலீசார் ஆகியோர் இணைந்து பட்டியல்  தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலங்களில் தேர்தலின்போது ஏற்பட்ட கலவர சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்கள் பரிந்துரையின்பேரில் இதற்கான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். வாக்குப்பதிவு அன்று அசம்பாவிதங்களை தடுக்க மத்திய துணை ராணுவத்தினரும், தமிழக அதிரடி  போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு பணிக்கு எவ்வளவு போலீசார் தேவை என்பது குறித்து தேர்தல் ஆணையம் பின்னர் அறிவிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



Tags : elections ,Assembly , Tensions over polls in Assembly polls
× RELATED 2026-ம் ஆண்டு புதிய கட்சியை தொடங்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவிப்பு!