×

நீட், ஜெஇஇ தேர்வுகளுக்கு பயிற்சி தர அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது வெட்கக்கேடானது : வேல்முருகன்

சென்னை : தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை : மத்திய பாஜக அரசும், உச்ச நீதிமன்றமும் போட்டி போட்டுக் கொண்டு, மாநில உரிமைகளைப் பறித்து வருகின்றன. அந்த உரிமைப் பறிப்புகளில் ஒன்றுதான் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான “நீட்” தேர்வு என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.எதிர்காலக் கனவுகளோடு கல்வி கற்க இளம் பிஞ்சுகள்,  இந்தியாவின் நீட் தேர்விற்கு வரிசையாக பலியாகிறார்கள். அனிதா தொடங்கி இன்று வரை எண்ணற்ற மாணவர்களை பலி வாங்கி வருகிறது.

நீட் தேர்வு தனியார் வணிகக் கொள்ளைக்கு வழி வகுக்கும், கூட்டாட்சி - கல்வி - பொதுச் சுகாதாரத்துறைக்கு வேட்டு வைக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.நீட் பயிற்சி அளிக்கும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் தான். கோடிக்கணக்கில் பணம் புரளும் வியாபாரமாக அவை திகழ்கின்றன.

இதனையெல்லாம் உறுதிப்படுத்தும் விதமாக, மத்திய அரசின் நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை என்றும்  அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை என்றும், அதனால் தான் தனியார் மூலம் இணைய வழியில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும் கொஞ்சம் கூட வெட்கமின்றி கூறுகிறார்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
தனியார் மூலம் கல்வி கற்க, பயிற்சி பெற அரசு எதற்கு என்பதை கொஞ்சம் கூட சிந்திக்காத நிலைக்கு தமிழக அரசும், அமைச்சர்களும் உள்ளனர் என்பது வேதனைக்குரியது.

மத்திய அரசின் நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை என்று கூறும் அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விட்டு, தனியார் மூலம் இணைய வழியில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது என ஒரு அமைச்சரே கூறுவது, தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாகும்.  இது தனியார் இலாப வெறி கொள்ளைக்கு துணைபோகும் நடவடிக்கையாகும்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் போன்று வேறு எந்த பள்ளி ஆசிரியர்களுக்கும் போதிய திறன் இல்லை என்பது தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கருத்து.

ஏனென்றால், தனியார் பள்ளிகளில், 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அப்பாடங்களை கற்பிக்காமல், 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பாடத்தையும், 11ஆம் வகுப்பு மாணவனுக்கு 12ஆம் வகுப்பு பாடத்தையும் கற்பிக்கப்படுகிறது. இதன் காரணமாக,  9, 11ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை மாணவர்கள் கற்க முடியாத சூழல் ஏற்படுகிறது. அதே நேரத்தில், தனியார் பள்ளி ஆசிரியர்களும், முழுமையான பாடங்களை கற்பிக்கும் திறனையும் இழக்கின்றனர்.

ஆனால், அரசுப்பள்ளியில், 9, 11ஆம் வகுப்பும் முறையாக நடத்தப்படுகிறது. இதன் மூலம், மாணவர்களும் முழுமையாக கற்கின்றனர். ஆசிரியர்களும் கற்பிக்கும் திறனை மேம்படுத்திக்கொள்கிறார்கள். தனியார் பள்ளிகள் மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மாற்றுகிறார்களே தவிர, சிறந்த மாணவனை உருவாக்கினர்கள் என்றால் கேள்விக்குறி தான்.

நீட் தேர்வுக்கு தனியார் நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படும் என்பது தவறான வழிக்காட்டல். அரசுப்பள்ளி மாணவர்கள் மீதான அவநம்பிக்கையை தான் ஏற்படுத்தும்.நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கருத்து. இதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் முன்னெடுத்த போராட்டங்களிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ச்சியாக பங்கேற்றுள்ளது.தனியார் பயிற்சி மையங்களால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளுக்கான கதவுகள் திறக்கப்படுவதில்லை. மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும்.

நீட் தேர்வு ஒழிக்கப்படும் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு தேவையான பயிற்சி வசதிகளை உயர் நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags : Senkottayan ,government school teachers ,Velmurugan , அமைச்சர் செங்கோட்டையன்
× RELATED சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது போக்சோ வழக்கு