×

அடக்குமுறைச் சட்டங்கள், அரசியல் பழி தீர்க்கும் ஆட்டம் ஆரம்பம்: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

சென்னை : சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் (Unlawful Activities (Prevention) Act ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 A (தேசத்துரோக குற்றச்சாட்டு) ஆகிய சட்டங்களை பயன்படுத்தி, மத்திய அரசு மக்களுக்காகப் போராடுகின்றவர்களையும், அரசின் கொள்கைகளுக்கு எதிராக மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் கைது செய்யும் போக்கு அண்மைக் காலத்தில் வளர்ந்து வருகின்றது என கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:

“சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் (Unlawful Activities (Prevention) Act ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 A (தேசத்துரோக குற்றச்சாட்டு) ஆகியவை, மக்கள் ஆட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானவை.

இத்தகைய அடக்குமுறைச் சட்டங்கள், அடிப்படை மனித உரிமைகளைப் பறித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை வாழ்நாள் முழுமையும் முடக்கும் தன்மை கொண்டவை .

இவற்றைப் பயன்படுத்தி, மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, மக்களுக்காகப் போராடுகின்றவர்களையும், அரசின் கொள்கைகளுக்கு எதிராக மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் கைது செய்யும் போக்கு அண்மைக் காலத்தில் வளர்ந்து வருகின்றது.

2014 முதல் 2018 வரை சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்தியாவில் 4,878 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக, தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

பீமா கொரேகான் வழக்கில், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியச் செயலாளர்களில் ஒருவரான சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 16 பேர் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், 2019 இல் மட்டும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணிப்பூருக்கு அடுத்து இந்திய அளவில், தமிழகத்தில் தான் அதிக வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன், தலைமைக்குழு உறுப்பினர் கோ. சீனிவாசன் மற்றும் அனுப்பூர் செல்வராஜ் ஆகியோர் 06.02.2021 அன்று சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், சேலம் தீவட்டிப்பட்டி காவல்துறை அதிகாரிகளால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 A பிரிவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2019 நவம்பர் 15 அன்று ஓர் இறப்பு அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றதற்காக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் காவல் துறை தெரிவிக்கின்றது.

அவர்களைத் தவிர, ‘சிறைவாசிகள் விடுதலைக் குழு’ பொறுப்பாளர் விவேக் எனும் விவேகானந்தன் ஆகியோர் மீதும், இதே அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டதற்காக, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 188 (அரசு ஊழியரால் முறையாகப் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்தல்), 120 B (குற்றவியல் சதித் திட்டத்தின் தண்டனை), 121 (இந்திய அரசுக்கு எதிராகப் போரிடுவது), 121 A (பிரிவு 121 கீழ் குற்றம் புரியச் சதி செய்தல்) மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 10 (தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக இருப்பவருக்குத் தண்டனை), 13 (சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தண்டனை), 15 (பயங்கரவாத நடவடிக்கை), 18 (சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்டவற்றுக்குத் தண்டனை) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒரு முகநூல் பதிவுக்காகவும், ஆங்கில நாளிதழில் வந்த ஒரு கட்டுரையைத் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டதற்காகவும் கடந்த டிசம்பரில் இவர் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற நடவடிக்கைகள், அந்தச் சட்டத்தையே கேலிக்கூத்தாக்குகின்றன. இறப்பு அஞ்சலி நிகழ்ச்சி நடந்து ஓராண்டுக்குப் பிறகு, 3 செயற்பாட்டாளர்களை தற்போது திடீரெனக் கைது செய்திருப்பது, எதிர்க்கட்சியினரை மிரட்டும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இறப்பு, இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்வதும், அங்கு சென்று கோஷமிடுவதும் குற்றம் என்றும், அப்படிச் செய்வோரைச் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்போம் என்பதும் சர்வாதிகாரத்தின் உச்சக்கட்டமாகும். காவல்துறையை தங்களது ஏவல் துறையாகப் பயன்படுத்துவது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல என்ற கண்டனங்களும் எழுந்துள்ளன.

பாஜக எதிர்ப்புச் சக்திகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களைத் தடுக்கும், ஒடுக்கும் செயலாகவே இது அமைந்துள்ளது.

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ( Unlawful Activities (Prevention) Act ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தேச விரோதப் பிரிவு (124 A-Sedition) ஆகியவை பொதுவாகவே ஒரு ஜனநாயக நாட்டில் தேவையற்றவை.

ஏனெனில், இவை அடிப்படை மனித உரிமைகளைப் பறித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒடுக்கும் தன்மை கொண்டவை.

இவற்றைப் பயன்படுத்தி, மக்களுக்காகச் செயல்படுவோரையும், அரசின் கொள்கைகளுக்கு எதிராக மாற்றுக் கருத்துக் கொண்டோரையும் கைது செய்யும் போக்கு அண்மைக் காலத்தில் வளர்ந்து வருவது, கொடுங்கோல் ஆட்சியின் தொடக்கம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இத்தகைய சர்வாதிகார நோக்கம் கொண்ட அடக்குமுறையை முறியடிக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் மிகப்பெரிய கடமையாகும்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

Tags : revenge game ,KS Alagiri , கே.எஸ்.அழகிரி
× RELATED தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு...