×

திறப்பு விழா செய்து ஒரே மாதத்தில் விழுப்புரம் பெண்ணையாறு தடுப்பணை உடைந்த விவகாரம்: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

விழுப்புரம்: திறப்பு விழா செய்து ஒரே மாதத்தில் விழுப்புரம் பெண்ணையாறு தடுப்பணை உடைந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  இன்று (12-02-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி - குப்பம் ஊராட்சி, காரணையில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியின் தொடக்கத்தில், கழகத் தலைவர் அவர்கள் பொதுமக்களில் சிலரது குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவர்களுக்கு பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு: விக்கிரவாண்டியைச் சேர்ந்த குணசேகரி என்ற இளம் பெண், சிறுவயதிலேயே தாய்தந்தையை இழந்து தம்பிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காரணமாக படிப்பையும் நிறுத்தி விட்டதாகக் கூறிக் கண்கலங்கினார். அவருக்கு ஆறுதல் கூறி கழகத் தலைவர் அவர்கள் பேசியதாவது: சிறுவயதில் அம்மாவையும் அப்பாவையும் இழந்து தவிக்கும் அந்த சகோதரிக்கு, பெற்றவர்கள் இல்லாத சோகம் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் தம்பிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அந்தப் பெண்ணின் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது.

தம்பிகளை படிக்க வைப்பதற்காக 10-வதுதோடு அந்த சகோதரி தன் படிப்பை நிறுத்திக்கொண்டு, என்னை நம்பி வந்திருக்கும் உங்களுக்கு உதவ வேண்டியது என்னுடைய கடமை என்று சொல்லி அவர்கள் தன் இரு தம்பிகளை காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள். கவலைப்படாதீர்கள். நிச்சயமாக நம்முடைய மாவட்ட நிர்வாகிகர்களிடத்தில் இதைப்பற்றி எடுத்துச்சொல்லி உறுதியாக உங்கள் படிப்பிற்கு உண்டான உதவியைச் செய்வேன். படித்து போலீசாக வேண்டும் என்பது உங்களுடைய ஆசை என்று சொல்லியிருக்கிறீர்கள்.
நம்முடைய கழக ஆட்சி விரைவில் அமையப்போகிறது. அவ்வாறு அமையும் ஆட்சியில் நிச்சயமாக உங்களுடைய ஆசை நிறைவேறும். தைரியமாக இருங்கள். நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். தைரியமாக இருங்கள். தி.மு.க. உங்களுக்கு என்றும் துணை நிற்கும் என்ற அந்த உறுதியை நான் தெரிவித்துக் அளிக்கிறேன்.


செவித்திறன் இழந்த தனது மகளின் கல்விக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்த தாட்சாயிணி என்ற பெண்மணிக்கு பதிலளித்து கழகத் தலைவர் கூறியதாவது: சகோதரி தாட்சாயிணி அவர்கள் தன்னுடைய மகள் செவித்திறனையும் பேச்சுத் திறனையும் இழந்திருப்பதால் அவரது கல்விக்காக சில கருவிகள் தேவைப்படுகிறது என்று சொன்னார்கள். இந்த நிகழ்ச்சியை நிச்சயமாக ஆளுங்கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள். நாம் பார்ப்பதைவிட அவர்கள் தான் அதிகமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் ஆரணியில் இதேபோல் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அங்கு ஒரு சகோதரி இதேபோல சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து தாயை இழந்த எனக்கு இந்த ஆட்சி 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக கொடுப்பதாக சொல்லியும் இதுவரை கொடுக்கவில்லை என்று சொன்னார்.

அப்போது உடனடியாக அந்த நிவாரணம் கிடைக்க நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்று சொன்னோம். இரவோடு இரவாக இந்த அரசு அந்த உதவித் தொகையைக் கொடுத்துவிட்டது. அதேபோல இந்த நிகழ்ச்சியைக் கூட அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒரு வேளை பார்த்தும் இரக்கம் வரவில்லை என்றால் 3 மாதம் மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நர்சிங் படித்த தனது மகளுக்கு வேலை கிடைக்கவில்லை என முறையிட்ட அஞ்சலை என்ற பெண்மணிக்கு பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

சகோதரி அஞ்சலை அவர்கள் நர்சிங் படித்து முடித்தும் அவருடைய மகளுக்கு வேலை இல்லை. அதனால் அவருடைய கல்விக்கடனைச் செலுத்த முடியாத வறுமை நிலையில் தவித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் வேதனையைச் சொல்லி இருக்கிறார்கள். கல்விக் கட்டணத்தில் 40,000 ரூபாய் பாக்கி இருக்கிறது. அதனால் கல்லூரியில் மாற்றுச் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான் ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலிலும், அதே போல இப்போது வருகிற தேர்தலில் சட்டமன்றத் தேர்தலிலும் மாணவர்கள் கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற உறுதியை நான் சொல்லி இருக்கிறேன்.

ஆனால் இதைப் பார்த்தப் பிறகு இப்போது இருக்கும் பழனிசாமி அவர்கள், நான் நினைத்ததை ஸ்டாலின் சொல்லிவிட்டார் என்று சொல்லுவார். நான் அதற்கு ஒரு பதில் சொன்னேன், நீங்கள் யார் காலிலும் விழக் கூடாது என்று சொன்னால் விழாமல் இருப்பீர்களா? இதுதான் என்னுடைய கேள்வி. இதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அவருடைய கல்வி கட்டணம் ரத்து செய்யப்படுவதற்கான எல்லாச் சூழலையும் உருவாக்கித் தருவோம் என்ற அந்த நம்பிக்கையை அந்த சகோதரிக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.

கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டாம் எனக் கூறியதற்காக அதிமுகவினர் கொலை மிரட்டல் விடுத்ததாக லீலாவதி என்ற பெண் முறையிட்டார். அதற்கு பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது: முல்லை அரும்பு சாகுபடி செய்யும் லீலாவதி அவர்கள் தன்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதை சொன்னதோடு, அந்த பகுதியில் இருக்கும் ஆளுங்கட்சியைச் சார்ந்த அ.தி.மு.க.காரர்கள் செய்யும் அடாவடித்தனத்தை பற்றியும் அவர்கள் கொடுத்திருக்கும் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அவர்கள் கொரோனா நேரத்தில் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக நரசிம்மன் என்கிற அ.தி.மு.க. பிரமுகர் அந்த அம்மாவை மிரட்டி இருக்கிறார்கள். நியாயமாக கோரிக்கை வைத்த ஒரே காரணத்திற்காக அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகள், திட்டங்கள், நிவாரண உதவிகள் எல்லாவற்றையும் இந்த அரசு முடக்கி வைத்திருக்கிறது. ஒரு சாதாரண பூ விவசாயியிடம் வெட்கம் இல்லாமல் இந்த அ.தி.மு.க. ஆட்சி தன் அதிகாரத்தை காட்டியிருக்கிறது. நீங்கள் யாருக்கும் பயப்படாமல் இருங்கள்.  இன்னும் கொஞ்சம் நாள் தான் அவர்கள் ஆட்டம். இந்த ஆட்டம் எல்லாம் 3 மாதங்களில் முடியப்போகிறது.

மூன்று மாதங்களில் நாம் ஆட்சிக்கு வரப்போகிறோம். அப்போது என்னென்ன உதவிகள் செய்ய வேண்டுமோ அதை நம்முடைய நிர்வாகிகளிடத்தில் சொல்லி செய்யச் சொல்வோம். உங்களுடைய வட்டாரத்தில் இருக்கும் நிர்வாகிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள். அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த ஐஸ்வர்யா என்ற மாணவியின் பேச்சைப் பாராட்டி, கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது: கிராமத்தில் இருந்து வந்திருந்தாலும், ஏழை - எளிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், 10ஆம் வகுப்பு மாணவியாக இருக்கும் ஐஸ்வர்யா என்ற சகோதரி அரகண்டநல்லூர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று சொன்னார்கள்.

ஏற்கனவே அந்த சட்டமன்ற தொகுதி உறுப்பினர் - முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்கள் இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார்கள். என்னிடமும்ம் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். அந்த பகுதியில் இருக்கும் மக்கள் இதற்காக போராட்டம் நடத்தப்போவதாக சொல்லியிருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். எனவே நான் உங்கள் மூலமாக அந்த தொகுதியில் இருக்கும் மக்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, நீங்கள் போராட்டம் நடத்த வேண்டாம். 3 மாதங்கள் பொறுத்திருங்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு அந்த கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

அதுமட்டுமில்லாமல் இன்றைக்கு தமிழுக்கு ஏற்பட்ட இழுக்கைப்பற்றி மிக அருமையாக அந்த சகோதரி பேசினார்கள். இன்றைக்கு மத்தியில் இருக்கும் ஆட்சி எப்படியாவது சமஸ்கிருதத்தை - இந்தியைக் கொண்டு வந்து இங்கு திணித்துவிட வேண்டும். அதனால் தமிழுக்கு வீழ்ச்சி ஏற்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டு கொண்டிருக்கிறது. கவலைப்படாதீர்கள். இது தந்தை பெரியார் வாழ்ந்த மண். பேரறிஞர் அண்ணா வாழ்ந்த மண். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் வாழ்ந்த மண். இந்த 3 பேரும் நமக்கு கற்றுக் கொடுத்திருப்பதை நாம் என்றைக்கும் மறக்க மாட்டோம்.

இங்கு என்றைக்கும் இந்திக்கு இடமில்லை. தமிழ் தான் நம்முடைய உயிர். தமிழுக்கு ஏதேனும் ஆபத்து வருகிறது என்று சொன்னால் அதைப் பார்த்துக் கொண்டு தி.மு.க. சும்மா இருக்காது. நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனவே, ஐஸ்வர்யா அவர்களுடைய கோரிக்கை விரைவில் நம்முடைய ஆட்சி வந்ததற்குப்பிறகு நிச்சயமாக நிறைவேற்றப்படும். அந்த சகோதரியே தி.மு.க. தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று நம்பிக்கையோடு பேசினார்கள். அந்த நம்பிக்கை வீண்போகாது. கவலைப்படாதீர்கள். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு கழகத் தலைவர் அவர்கள் இவ்வாறு பதிலளித்துப் பேசினார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நிறைவு செய்து கழகத் தலைவர் ஆற்றிய உரை விவரம் வருமாறு: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் - என்ற மக்கள் பயணத்தை இது வரை இரண்டு கட்டங்களாக நடத்தித் தமிழகத்தில் உள்ள 71 தொகுதிகளைச் சேர்ந்த மக்களைச் சந்தித்துள்ளேன். மூன்றாம் கட்டப் பயணத்தை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து இன்று தொடங்குகிறேன்.

இன்று மாலையில் உளுந்தூர்பேட்டையிலும் நாளைய தினம் விருத்தாசலம் மற்றும் சிதம்பரத்திலும் மக்களைச் சந்தித்து மனுக்களை வாங்க இருக்கிறேன். இந்த மனுக்கள் உள்ள பெட்டிகள் அனைத்தும், நாம் ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே திறக்கப்படும். ஒவ்வொருவர் கவலையும் வரிசையாகத் தீர்க்கப்படும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைவது என்பது உங்களது கவலைகளைத் தீர்ப்பதற்காகத்தான். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகத்தான். உங்களது எண்ணங்களை அமல்படுத்துவதற்காகக் தான் என்பதை மக்கள் முதலில் உணர்ந்திருக்கிறார்கள்.

இதுவரை நான் வலம் வந்த 71 தொகுதிகளாக இருந்தாலும்- இன்று மனுக்களைத் தந்து நீங்கள் பேசி இருக்கக் கூடிய இந்த மாவட்டத்தின் நான்கு தொகுதிகளாக இருந்தாலும் - எந்தத் தொகுதியாக இருந்தாலும் மக்கள் பேசுவதைக் கேட்கும் போது தமிழ்நாட்டில் ஆட்சி என்ற ஒன்று இல்லை, இல்லவே இல்லை என்பதைத் தான் உணர முடிகிறது. ஆட்சி என்ற ஒன்று இருந்திருந்தால் மக்களின் அன்றாடப் பிரச்னைகளை ஒரு அரசாங்கம் நிச்சயமாக தீர்த்து வைத்திருக்கும். மக்கள் கோரிக்கை வைப்பது எல்லாம் ஏதோ பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கானவை அன்று. அவை அவர்களது அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பிரச்னைகளைத் தீர்க்கவே கோரிக்கை வைக்கிறார்கள். அதைக் கூட பழனிசாமி அரசாங்கம் நிறைவேற்றவில்லை.

பல்லாயிரக்கணக்கான மக்கள் என்னிடம் கோரிக்கை மனுக்கள் கொடுக்கிறார்கள் என்பதைப் பார்த்து மிரண்டு போன பழனிசாமி, குறைதீர்க்கும் மேலாண்மைத் திட்டம் கொண்டுவரப்போவதாகவும், அதற்கு போன் செய்தால் போதும் என்றும் அதனால் ஸ்டாலினுக்கு இனி வேலை இல்லை என்றும் சொல்லி இருக்கிறார். கடந்த நான்காண்டு காலமாக பழனிசாமிக்கு இந்த புத்தி வரவில்லை. இந்த ஸ்டாலின் சொன்ன பிறகு தான் புத்தி வருகிறதா? அப்படி என்றால் யார் முதலமைச்சர்? அவரா? நானா?

அதுவும் புகாரை செல்போன் மூலமாக சொல்ல வேண்டுமாம்! 2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் செல்போன் தரப்படும் என்று சொன்னார்களே? செய்தார்களா? இல்லை! பழனிசாமி கொடுத்தாரா? இல்லை! அல்வா தான் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். எல்லா மக்கள் குறையையும் நான் தீர்த்துவிட்டேன். ஸ்டாலினிடம் மக்கள் மனு கொடுக்கவில்லை என்றும் பழனிசாமி சொல்லி இருக்கிறார். மனுக் கொடுத்த நீங்கள் மக்கள் இல்லையா? வானத்தில் இருந்து குதித்து வந்துள்ளீர்களா?

ஒரு முதலமைச்சர் பேசுகிற பேச்சா இது? கடந்த நான்கு ஆண்டுகளாக பழனிசாமி எதையும் செய்யவில்லை என்பதைத்தான் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் மனுக்களின் மூலமாகச் சொல்லி வருகிறார்கள். இந்த லட்சணத்தில் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் தனது ஆட்சியில் எந்தக் குறையும் ஸ்டாலினால் கண்டுபிடிக்க முடியாது என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார். பழனிசாமி ஆட்சியின் குறைகளைக் கண்டுபிடிக்க பூதக்கண்ணாடி தேவையில்லை! கண்ணை மூடிக் கொண்டு இருந்தாலே கண்டுபிடித்துவிடலாம்!

திடீரென்று விழுப்புரத்தில் தடுப்பணை உடையும் சத்தம் வரும்! படாரென்று தாராபுரத்தில் பாலத்தில் விரிசல் விடும் சத்தம் வரும்! கரூரில் மினி கிளினிக் உடைந்து விழும்! நாமக்கல்லில் மருத்துவக்கல்லூரி கட்டடமே இடிந்து விழுந்தது. அந்த சப்தம் வரும்! படார் படார் என்றும் மடார் மடார் என்றும் அரசுக் கட்டடங்கள் உடைந்து விழுந்தால் அது பழனிசாமி ஆட்சி என்று அர்த்தம். பொதுப்பணித்துறை அமைச்சரான பழனிசாமியின் கைங்கர்யம் இவை என்று அர்த்தம். இவை அனைத்தையும் காதால் கேட்கலாம். கண்ணைத் திறந்தே பார்க்கத் தேவையில்லை!

பழனிசாமியின் ஊழல் ஆட்சிக்கு உதாரணம் இந்த விழுப்புரத்தில் பெண்ணையாற்று தடுப்பணை உடைந்து விழுந்த காட்சி ஒன்று போதாதா? 25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரு மாத காலத்தில் உடைந்து விட்டது. அது அணை அல்ல, சுவர் தான் என்கிறார் சட்ட அமைச்சர் சண்முகம். காலையில் பார்த்தால் அணை என்பார். ராத்திரியில் பார்த்தால் சுவர் என்பார். அப்படி ஒரு மனிதர்தான் சி.வி.சண்முகம். 25 கோடி மதிப்பிலான அணையில் எத்தனை கோடி இவர்களால் சுருட்டப்பட்டது என்பது தெரியவில்லை. அணை உடைந்ததும், திருடனுக்கு தேள் கொட்டியதை போல மாட்டிக் கொண்டார் சண்முகம். நாங்கள் இன்னமும் அணையைத் திறக்கவில்லையே என்றும் சொல்லி இருக்கிறார். 20.12.2020 அன்று திறந்து வைத்துள்ளார்கள். அமைச்சரும் அந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். (திறப்புவிழா பற்றிய காணொலி காண்பிக்கப்பட்டது)

நல்ல வேளை நாங்கள் இன்னமும் அணையே கட்டவில்லையே என்று சண்முகம் சொல்லவில்லை. ஒரு படத்தில் வடிவேலு சொல்வார், கிணத்தைக் காணோம் என்று. அதைப் போல பேசி வருகிறார் சண்முகம். ஊழல் முறைகேடு காரணமாக அந்த அணை இடிந்து விழுந்தது. அந்த ஒப்பந்தகாரர் மீது இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது? சில அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். இவை கண்துடைப்பு நடவடிக்கைகள். ‘ரயில் எஞ்சினைத் திருடியவர்களை விட்டுவிட்டு, கரித்துண்டு திருடியவனைப் பிடித்துக் கொண்டார்கள்’ பாலைவன ரோஜாக்கள் படத்தில் கலைஞர் எழுதிய வசனம்தான் நினைவுக்கு வருகிறது. சில வாரங்கள் ஆனதும் அவர்களுக்கும் மீண்டும் வேலை தரப்பப்பட்டு விடும். அந்த ஒப்பந்தகாரர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

ஓராண்டுக்கு முன்னால் செஞ்சியில் ஒரு ஆண்கள் பள்ளியின் செப்டிக் டேங் உடைந்தது. அதற்காக அந்த ஒப்பந்தகாரர் கைது செய்யப்பட்டாரே? அது போல் இந்த தடுப்பணை கட்டியவரை கைது செய்ய இந்த அரசாங்கம் தவறியதற்கு என்ன காரணம்? பொதுப்பணித்துறையை வைத்திருக்கும் பழனிசாமி இதற்கு பதில் சொல்வாரா? எல்லாம் தெரிந்த மேதாவி சி.வி. சண்முகம் பதில் சொல்வாரா? இந்தக் கூட்டத்தின் வாயிலாக சி.வி.சண்முகத்துக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் வகிக்கும் பதவி, மரியாதைக்குரியது. அந்த மரியாதையைக் காப்பாற்றும் வகையில் நடந்து கொள்ளுங்கள். பேசுங்கள்.

என்னை ஒருமையில் சி.வி.சண்முகம் பேசுவதற்காக எனது தகுதி குறைந்துவிடப் போவதில்லை.  பேரறிஞர் அண்ணா ஒரு கதை சொல்வார். கோவில் யானை ஒன்றைக் குளிப்பாட்டி பாகன் அழைத்துச் சென்ற போது, எதிரே சாக்கடையில் விழுந்து உருண்டுவிட்டு வந்த பன்றியைப் பார்த்து யானை ஒதுங்கிச் சென்றதாம். அப்போது யானை தன்னைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிச் செல்வதாக பன்றி நினைத்துக் கொண்டதாம். அதுபோலத்தான் இவர்களைப் பார்த்து நாம் ஒதுங்கிச் செல்கிறோம். சி.வி.சண்முகம் அவர்களே… உங்களை நோக்கி மைக் நீட்டுவது பேசுவதற்குத் தானே தவிர, வாந்தி எடுப்பதற்கு அல்ல. திமுகவுக்கு மானமில்லையா என்று கேட்கும் சண்முகம் அவர்களே! உங்களை கொலை செய்ய ஆள் அனுப்பியவர் வீட்டில் தலைவாழை இலை போட்டு சாப்பிடும் போது வெட்கமாக இல்லையா? மானம் உங்களுக்கு இன்னமும் இருக்கிறதா? இல்லையா?

காலையில் சின்னம்மா... மாலையில் அம்மா... மறுநாள் காலையில் அம்மம்மா.. அடுத்தநாள் எந்தம்மா? - என்று நித்தமும் உளறித்திரியும் போது வெட்கம் இருந்ததா இல்லையா?அம்மா அம்மா என்று சொல்லும் சண்முகம், அந்த அம்மாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை விலக்க, கண்டுபிடிக்க முயற்சி செய்தாரா? சுகாதாரத் துறை செயலாளர் இராதாகிருஷ்ணனை குற்றம் சாட்டி பேட்டி கொடுத்தாரே? துணைமுதலமைச்சராக இப்போது இருக்கும் பன்னீர்செல்வத்தை கருங்காலி, துரோகி என்று சொன்னதும் அவர் தான்! இன்றைக்கு இருவரும் ஒரே அமைச்சரவையில் எப்படி இருக்கிறீர்கள்?

2012 ஆம் ஆண்டு சண்முகத்திடம் இருந்த அமைச்சர் பதவியையும், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியையும் ஜெயலலிதா பறித்தார். எதற்காக பறித்தார் ஜெயலலிதா? சொல்வாரா சண்முகம்? பத்திரப்பதிவுத் துறையில் அவர் புகுந்து விளையாடத் தொடங்கியது மட்டுமல்ல, அதிகாரிகளையும் கண்டவாறு திட்டியதால் தான் அவரது பதவியைப் பறித்து மூலையில் உட்கார வைத்தார் ஜெயலலிதா.

முந்தைய ஆட்சி காலத்தில் அமைச்சராக அவரால் ஆக முடியவில்லை. இம்முறை கருணை அடிப்படையில் மாவட்ட கோட்டாவில் மந்திரியானவர் தான் சண்முகம். இத்தகைய வரலாறுகள் அனைத்தும் மாவட்டத்து மக்களுக்கும் தெரியும். தமிழ்நாட்டுக்கும் தெரியும்.
தனது பதவியைப் பயன்படுத்தி இந்த மாவட்டத்து மக்களுக்கு செய்தது என்ன? என்று நான் கேட்ட கேள்விக்கு இதுவரை சண்முகத்தால் பதில் சொல்ல முடிந்ததா? ஊருக்கு சவால் விடுவது இருக்கட்டும்! சொந்த ஊருக்கு என்ன செய்தீர்கள் அதை முதலில் சொல்லுங்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது தெருத்தெருவாகப் போய், நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று பழனிசாமி சொன்னாரே. துரும்பையாவது நகர்த்தினீர்களா?

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது விழுப்புரம் நகரத்துக்கு விரிவாக்கப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டம் வரும் என்றீர்கள். டெண்டர் விட்டு ஒன்றரை ஆண்டாகி விட்டது. ஏன் இதுவரை பணிகள் தொடங்கவில்லை? விழுப்புரம் நகராட்சியையாவது, சிறப்புநிலை நகராட்சி ஆக்கினீர்களா? அதுவும் இல்லை! பத்து ஆண்டுகள் ஆகியும் விழுப்புரத்துக்கு சுற்றுவட்ட சாலை வந்ததா? இல்லை! முதலமைச்சர் ஒரு உதவாக்கரை! மந்திரிகள் உளறுவாயர்கள்! இப்படிப்பட்ட ஆட்களிடம் இருந்து கோட்டையை மீட்பதற்கான தேர்தல் தான் இந்த தேர்தல். இவர்கள் பொதுமக்களின் குறைகளை கேட்கவும் மாட்டார்கள். பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் மாட்டார்கள். இவர்கள் மக்களைப் பற்றி நினைக்கவும் மாட்டார்கள். மக்களோடு இருக்கவுமாட்டார்கள்.

இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து- மக்களாட்சிக்கு தொடக்கப்புள்ளி வைக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன். கழக ஆட்சி மலரும்! உங்கள் கவலைகள் யாவும் தீரும்! நன்றி. வணக்கம். இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

Tags : dam breach ,Villupuram Pennayaru ,opening ceremony ,contractor ,MK Stalin , Villupuram Pennayaru dam breach within one month of opening ceremony: Why no action was taken against the contractor? As MK Stalin's question
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கிளை திறப்பு விழா