×

20 திருக்குறள் ஒப்புவித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்... கரூர் பங்க் உரிமையாளர் அறிவிப்புக்கு சீமான் வாழ்த்து!!

கரூர் : கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த நாகம்பள்ளி கிராமத்தில் வள்ளுவர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் செங்குட்டுவன், இளைய தலைமுறை மத்தியில் திருக்குறள் கற்றலை ஊக்குவிக்கும் விதமாக, 10 திருக்குறள் ஒப்புவித்தால் 1/2 லிட்டர் பெட்ரோல், 20 திருக்குறள் ஒப்புவித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.இந்த போட்டியில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என அறிவித்திருக்கிறார். இந்த அசத்தல் அறிவிப்பை பயன்படுத்திக் கொள்ளும் அப்பகுதி மக்கள், தங்களது பிள்ளைகளுக்கு திருக்குறள் கற்றுக் கொடுத்து இலவசமாக பெட்ரோல் வாங்கிச் செல்கிறார்களாம்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் அருகே நாகம்பள்ளி கிராமத்திலமைந்துள்ள வள்ளுவர் எரிதிரவக்கிடங்கில், 20 குறள்களைக் கூறினால் மாணவர்களுக்கு எரிதிரவம் பரிசாக வழங்கப்படும் என அதன் உரிமையாளர் ஐயா செங்குட்டுவன் அறிவித்திருக்கிற செய்தியறிந்து பெரிதும் மகிழ்வுற்றேன்.வணிகத்தில் இலாபமீட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாது தமிழுக்குத் தொண்டாற்றுவதையும், உலகப்பொதுமறை திருக்குறளின் மேன்மையை நாளைய தலைமுறைக்கு எடுத்துரைப்பதையும் நோக்கமாக கொண்டு பெரும்பணியாற்றி வரும் ஐயா செங்குட்டுவன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்,என்றார்.


Tags : punk owner announcement ,Seeman ,Karur , சீமான்
× RELATED சீமான் தாக்கல் செய்த வழக்கில் நடிகை...