சென்னை: அண்ணா பல்கலை.யில் எம்.டெக் பயோடெக்னாலஜி, கம்ப்யூடேஷனல் டெக்னாலஜி படிப்புகளை தொடங்க அனுமதி தர மறுப்பு தெரிவித்துள்ளது. எம்.டெக் படிப்பு தொடர்பான வழக்கு விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மறுப்பு தெரிவித்துள்ளது. எம்.டெக் படிப்பு தொடங்க கடந்த டிசம்பருடன் அவகாசம் முடிந்துவிட்டதால் அனுமதிக்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு எம்.டெக் படிப்புகளை ரத்து செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிபதி புகழேந்தி முன்பு நடைபெற்று வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அண்ணா பல்கலை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இரு எம்.டெக் படிப்புகளும் தொடர்ந்து நடத்தப்படும் என உறுதியளித்தார்.
எனினும் மத்திய அரசின் இட ஒதுக்கீடோடு சேர்த்து மாநில அரசின் இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்த, 9 இடங்களையும் உருவாக்குவதற்கு கில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி தேவை என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை இன்று வைத்திருந்தது. இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது கில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இரு எம்.டெக் படிப்புகளை தொடங்குவதற்கான கால அவகாசம் கடந்த ஆண்டு டிசம்பருடன் நிறைவடைந்துவிட்டதால் தற்போது அனுமதி அளிக்க முடியாது என கைவிரித்துவிட்டார்.
அரிதான சூழலை கருத்தில் கொண்டு இது தொடர்பாக கில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் கேட்டு மீண்டும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி ஏன் இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகமோ மாநில அரசோ உச்ச நீதிமன்றத்தை நாடி தீர்வு காண கூடாது என்ற கேள்வியை முன்வைத்திருக்கிறார். தொடர்ந்து கில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடமும், அண்ணா பல்கலை.யிடமும் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு வழக்கு விசாரணையை மதியம் 2.15 மணிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.